எனது பெயரில் பதிவுகளைப் பரப்பும் ட்விட்டர் கணக்கு போலியானது என்று நடிகை கயாடு லோஹர் விளக்கம் அளித்துள்ளார்.
கரூர் துயர சம்பவம் குறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை கயாடு லோஹரின் எக்ஸ் தளத்தில் கணக்கில் வெளியான பதிவு எதிர்வினைகளைத் தூண்டியது.
ஏனெனில், அந்த பதிவில் ‘சுயநல அரசியலுக்காக கரூரில் தனது நண்பர்களில் ஒருவரை இழந்ததாகவும், விஜய் உங்கள் நட்சத்திர அந்தஸ்துக்கு மக்கள் துணையாக இல்லை; உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்?’ என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கயாடு தனது உண்மையான எக்ஸ்தள பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர், “எனது பெயரில் பதிவுகளைப் பரப்பும் ட்விட்டர் கணக்கு போலியானது. எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் அங்கு வெளியிடப்பட்ட அறிக்கைகள் என்னுடையவை அல்ல. கரூர் பேரணியில் நடந்த துயர சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், மேலும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இருப்பினும், கரூரில் எனக்கு தனிப்பட்ட நண்பர்கள் யாரும் இல்லை என்பதையும், என் பெயரில் பரப்பப்படும் கதை தவறானது என்பதையும் நான் மிகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இந்த தவறான தகவலை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம். மீண்டும் ஒருமுறை, துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுடன் எனது பிரார்த்தனைகள்” என தெரிவித்துள்ளார்.