புதிய இணைப்பு
பருத்தித்துறை பிரதேச சபையின் (Point Pedro Pradeshiya Sabha) புதிய தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் போட்டியின்றி ஏகமனதாக தெரிவாகியுள்ளார்.
பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று (17) பருத்தித்துறை பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
20 உறுப்பினர்களை கொண்ட பருத்தித்துறை பிரதேச சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி 9 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும், சுயேட்சை குழு 2 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்மொழியப்பட்ட உதயகுமார் யுகதீஸ் தவிசாளராகவும் பிரதி தவிசாளராக முன்மொழியப்பட்ட கனகரத்தினம் ஶ்ரீகாந்தருபனும் ஏகமனதாக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழ். பருத்தித்துறை நகர சபையில் ஆட்சி அமைக்கும் சைக்கிள் அணி
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (All Ceylon Tamil Congress) கட்சியின் உறுப்பினர் வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜீவநந்தினி பாபு தலைமையில் தவிசாளர் தெரிவுக்காக இன்று (17) நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் 7 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றிபெற்றுள்ளார்.
தவிசாளர் பதவிக்காக இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் தி.சந்திரசேகர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் வின்சன் டிபோல் டக்ளஸ்போல் ஆகிய இருவர் முன்மொழியப்பட்டிருந்தனர்.
இந்த வாக்கெடுப்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் பரான்சிஸ் ரட்ணகுமார் வெளிநடப்பு செய்ததுடன் மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
அதனைத் தொடர்ந்து உப தவிசாளர் தெரிவு இடம்பெற்ற நிலையில் 7/3 என்ற அடிப்படையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் தேவசிகாமணி தேவராசேந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் பருத்தித்துறை நகரசபை செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K.Shivajilingam), ஜனநாயக போராளிகள் கட்சியின் யாழ் மாவட்ட தலைவர் ஆ.சுரேஸ்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.