இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலையை எதிர்கொண்டு, இரு நாடுகளிலும் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து விழிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.
அநதவகையில், எந்தவொரு இலங்கையருக்கும் அவர்களின் பாதுகாப்பு குறித்து ஏதேனும் கவலை ஏற்பட்டால், அவர்கள் தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அறிவித்துள்ளார்.
இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதில் சிரமம் உள்ள இந்த நாட்டில் வசிக்கும் உறவினர்கள் இருந்தால், அவர்கள் அது குறித்து வெளியுறவு அமைச்சை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம் என்றும் அருண் ஹேமச்சந்திர கூறியுள்ளார்.
இதற்கிடையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தொடர் ஏவுகணைத் தாக்குதல்களில் இரண்டு இலங்கைப் பெண்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார அறிவித்தார்.
இன்று (15) அதிகாலை இஸ்ரேலிய பகுதிகளான பட்டாம்பாங் மற்றும் ராமத் கான் மீது ஏவுகணைத் தாக்குதல்களால் கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, அவர்கள் தங்கியுள்ள இடங்களுக்கு நிமல் பண்டார நேரில் சென்று அவர்களின் நலம் விசாரித்துள்ளார். இதற்கிடையில், ஈரான் மீதான தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட 128 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானிய சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, ஈரானிய ஊடகங்கள் இந்த தாக்குதல்களில் சுமார் 900 பேர் காயமடைந்ததாக செய்தி வெளியிட்டுள்ளன. இறந்தவர்களில் இரண்டு மாதக் குழந்தையும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களில் இஸ்ரேலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 380 என்று இஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய இஸ்ரேலில் உள்ள பாட் யாம் பகுதியில் நேற்று ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒரு குடியிருப்பு வளாகத்திற்கு கடுமையான சேதம் ஏற்பட்டது. அத்துடன், ஈரானிய ஆயுத உற்பத்தி மையங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
தங்கள் உயிரைப் பாதுகாக்க இந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு ஈரானியர்களுக்குத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள், மறு அறிவிப்பு வரும் வரை அந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ளன.