சிறுமியின் தங்க வளையலை தூக்கிச்சென்று கூட்டில் வைத்திருந்த காகத்தின் செயல் வினோதமாகவும், வியப்பாகவும் உள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு காப்பட் பகுதியை சேர்ந்த தம்பதியினர் நசீர் மற்றும் ஷரீபா. இவர்கள் சம்பவம் நடைபெற்ற நாளில் உறவினரின் திருமணத்திற்கு சென்றனர். அங்கு, இவர்களது ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகளான சிறுமி பாத்திமா ஹைபா தங்க நகைகள் அணிந்திருந்தார்.
அப்போது, திருமணத்திற்கு வந்ததும் சிறுமி தான் அணிந்திருந்த தங்க வளையலை கழற்றினார். ஒரு பேப்பரில் 6 கிராம் எடையுள்ள தங்க வளையலை சுற்றி பையின் மேல் வைத்துள்ளார்.
அந்த நேரத்தில் சிறுமியின் தாயார் வளையலை பத்திரமாக வைக்கும்படி கூறியுள்ளார். ஆனால், சிறுமி அதனை கவனிக்கவில்லை.
இதன் பின்னர், 10 நாட்கள் கழித்து உறவினர் வீட்டில் இருந்து நசீரின் குடும்பத்தினர் புறப்பட்டனர். அப்போது, சிறுமியிடம் தங்க வளையல் இல்லாததை பார்த்து அதிர்ச்சியாகினர். அப்போது அவர்கள் சிறுமியிடம் கேட்டனர்.
அவரும், பையின் மீது வைத்ததாக கூறினார். ஆனால், அந்த இடத்தில் பார்த்த போது வளையல் இல்லாததால் அவர்கள் வேதனையடைந்தனர். இந்நிலையில், ஷரீபாவின் உறவினரான சுலைகா மற்றும் பக்கத்து வீட்டு பெண் சாந்தா ஆகியோர் காகம் ஒன்று பிளாஸ்டிக் வளையலை தூக்கி சென்றதை பார்த்துள்ளனர்.
அதனால், தங்களது தங்க வளையலையும் தூக்கிச் சென்றிருக்கக்கூடும் என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது. இதன்பின்னர், சிறுமியின் உறவினர் காகம் கூடு கட்டி வைத்திருந்த தென்னை மரத்தில் ஏறி பார்த்தனர்.
அப்போது சிறுமியின் தங்க வளையல் இருந்தது. அவர் அதனை எடுத்து சிறுமியின் தாயிடம் கொடுத்தார். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.