லண்டனில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்… வெளியாகியுள்ள புதிய தகவல்கள்
லண்டனில் நேற்று முன்தினம் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்ணின் பெயர் முதலான சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.10 மணியளவில், லண்டனிலுள்ள Croydonஇல் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டார்கள்.
ஆம்புலன்ஸ், மருத்துவ உதவிக்குழுவினருடன் விரைந்த பொலிசார், அந்த வீட்டில் 19 வயது இளம்பெண் ஒருவர், கத்திக்குத்துக் காயங்களுடன் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவ உதவிக்குழுவினர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், அந்தப் பெண்ணின் பெயர் மேஹாக் ஷர்மா (Mehak Sharma) என்றும், சமீபத்தில்தான் அவர் இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த துயர சம்பவம் தொடர்பாக, அதே வீட்டிலிருந்த 23 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய பெயர் சாஹில் ஷர்மா என்றும், அவர் அந்த பெண்ணுக்கு அறிமுகமானவர் என்றும் கூறப்படுகிறது.
சாஹில் ஷர்மா இன்று Wimbledon நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார். அத்துடன், மேஹாக் ஷர்மாவின் உடலுக்கு இன்று சிறப்பு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
பொலிசார் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்துக்குரிய வகையில் பொதுமக்கள் யாராவது இந்த வழக்கு தொடர்பில் எதையாவது பார்த்திருந்தால், அல்லது கேட்டிருந்தால் உடனே தங்களுக்கு தெரிவிக்க முன்வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.