உலகம்

புலம்பெயர் மக்களை எல்லையில் கொன்று குவிக்கும் மத்திய கிழக்கு நாடு

Published

on

ஏமன் எல்லையில் புலம்பெயர் மக்களை சவுதி அரேபிய எல்லைக் காவலர்கள் இரக்கமின்றி பெருமளவில் கொன்று தள்ளியதாக பகீர் தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட ஏமனைக் கடந்து சவுதி அரேபியாவை அடையச் சென்ற எத்தியோப்பிய மக்கள் நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் காயங்களுடன் தப்பிய புலம்பெயர் மக்களில் பலர், வழியெங்கும் சடலங்களை பார்க்க நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளனர். புலம்பெயர் மக்களை ஏமன் எல்லையில் சவுதி அரேபியா வேட்டையாடுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை முன்பு அந்த நாடு மறுத்து வந்தது.

இந்த நிலையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பு இந்த விவகாரம் தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புலம்பெயர் மக்கள் மீது மழை போன்று துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவுடனான யேமனின் ஆபத்தான வடக்கு எல்லையில் சவுதி காவல்துறை மற்றும் ராணுவத்தினர் இணைந்தே கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

காயங்களுடன் தப்பிய 21 வயதான முஸ்தபா சௌபியா முகமது என்ற இளைஞர் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தம்முடன் எல்லையை கடக்க முயன்ற குழுவினரில் கொத்தாக 45 பேர்கள் சவுதி பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானதாக தெரிவித்துள்ளார்.

3 மாதங்கள் பயணித்து கடும் போராட்டங்களுக்கு பின்னர் எல்லையை நெருங்கிய நிலையில், சவுதி அரேபிய எல்லைக்காவலர்கள் கண்மூடித்தனமாக சுட்டதாக அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

18 வயதான இளம்பெண் ஒருவர் சுமார் 1950 பவுண்டுகள் கடத்தல்காரர்களுக்கு செலவிட்டு ஏமன் எல்லையை அடைந்ததாகவும், ஆனால் துப்பாக்கி குண்டுகளை எதிகொள்ள நேர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒற்றை துப்பாக்கி குண்டால் தனது ஒரு கையில் மொத்த விரல்களும் சிதறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அமைப்பு ஒன்று தெரிவிக்கையில்,

கடுமையான போராட்டத்திற்கு பின்னர் ஆண்டுக்கு 200,000 மக்கள் சவுதி அரேபியாவில் நுழையும் பொருட்டு ஏமன் எல்லையை கடப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நெருக்கடியான பயணத்தில் பலர் சிறைபிடிக்கப்படுவதுடன், கடுமையான தாக்குதலுக்கும் இலக்காகின்றனர்.

புலம்பெயர் மக்களின் முக்கிய பாதையாக கருதப்படும் ஏமனில் பயணத்தின் இடையே இறந்தவர்களின் கல்லறைகள் தான் நிரம்பியுள்ளதாக கூறுகின்றனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version