மருத்துவம்

இளநீர் எந்த நேரத்திலும் பருகலாமா?

Published

on

இளநீரில் இயற்கையான ஈரப்பதம், பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நீரேற்றத்திற்கு உதவும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் இதில் நிறைந்துள்ளன. இளநீர் அல்லது முற்றிய தேங்காய் தண்ணீர் பருகுவது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கு மட்டுமின்றி கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பலரும் பகல் வேளையில்தான் இளநீர் பருகுவதற்கு விரும்புவார்கள். இரவில் இளநீர் பருகலாமா? என்ற சந்தேகம் நிறைய பேருக்கு உள்ளது. ஆனால் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு இளநீர் பருகுவது பருவ கால நோய்த்தொற்றுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும்.

1. உயர் ரத்த அழுத்தம்: பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக நோய் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதற்கு உயர் ரத்த அழுத்தம் முக்கிய காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை இதயம் துடிக்கும்போது தமனிகளுக்கு எதிராக ரத்தம் உந்தி தள்ளப்படுவதால் ஏற்படும் அழுத்தம் உயர் ரத்த அழுத்தத்திற்கு வித்திடுகிறது. இளநீர் நச்சு நீக்கும் பானமாக அறியப்படுகிறது. இதனை உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் பருகினால் ரத்த அழுத்தம் குறையத் தொடங்கும். எனினும் உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்து உட்கொள்பவர்கள் இளநீரை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் அது ரத்த அழுத்தத்தை அதிகமாக குறைத்து, நோய் பாதிப்புகளை அதிகப்படுத்திவிடக்கூடும்.

2. இதய நோய்கள்: திரவ வடிவம் கொண்ட இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், பொட்டாசியம் போன்றவை உள்ளன. உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கு இவை அவசியமானவை. மேலும் இளநீர் இதய நோய்களை தடுக்க உதவும். அந்த அளவுக்கு இதய ஆரோக்கியத்தில் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

3. நச்சுக்கள்: உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை போக்கி நீர்ச்சத்தை தக்க வைப்பதற்கு இளநீர் உதவும். அன்றாடம் உண்ணும் உணவில் நொறுக்குத்தீனிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலும், காற்று மாசுபாட்டாலும் உடலில் எண்ணற்ற நச்சுக்கள் உருவாகின்றன. இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தேங்காய்த் தண்ணீர் பருகி வரலாம். இது உடலில் இருந்து அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றும் பானமாக செயல்படுகிறது. மேலும் இந்த பானம் நீர்ச்சத்தை தக்கவைப்பதோடு புத்துணர்ச்சியையும் கொடுக்க வல்லது.

4. சிறுநீரக கற்கள்: சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் குறைந்தது 12 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அத்தகைய பாதிப்புக்குள்ளானவர்கள் தினமும் ஒரு வேளை உணவில் தேங்காய் நீரை சேர்த்துக்கொள்ள மறக்கக் கூடாது. இரவில் தேங்காய் நீரை பருகினால் அதில் இருக்கும் சத்துக்கள் இரவு முழுவதும் உடலில் வினை புரிந்து ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

5. சிறுநீர் தொற்று: தேங்காய் நீர் டையூரிடிக் என்று கருதப்படுகிறது. இது சிறுநீர் மூலம் நச்சுகளை வெளியேற்ற உதவும். இளநீர் பருகினால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். அப்படி சிறுநீர் அதிகம் கழிப்பது உடலில் உள்ள அனைத்து சிறுநீர் தொற்றுகளையும் வெளியேற்ற துணை புரியும்.

#LifeStyle

1 Comment

  1. Pingback: இளநீர் ஏற்றுமதி அதிகரிப்பு - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version