உலகம்

ரஷ்ய வெடிமருந்து கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல்

Published

on

ரஷ்ய வெடிமருந்து கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல்

ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள மத்திய கிரிமியா வெடிமருந்து கிடங்கு மீது உக்ரைன் ட்ரோன் (ஆளில்லா விமானம்) மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து, சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாகச் சண்டை நீடித்து வருகின்றது.

இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன.

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகள் அளித்து வருவதால் இப்போரில் ரஷ்யப் படைக்கு எதிராக உக்ரைன் இராணுவம் கடுமையாகப் போரிட்டு வருகின்றது. இதில் ரஷ்ய இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா பகுதியில் வெடி மருந்து கிடங்கு மீது ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது.

மத்திய கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது ட்ரோன்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் வெடிமருந்து கிடங்கில் பல அடி உயரத்துக்கு தீ பிழம்பு எழுந்துள்ளதுடன், அங்கு பெரும் கரும்புகை வெளியேறியுள்ளது.

இந்த தாக்குதல் காரணமாகக் கிடங்கைச் சுற்றி 5 கிலோ மீட்டர் பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக காணொளிகள் வெளியாகியுள்ளன.

தொடருந்து நிலையம் அருகே உள்ள வெடிமருந்து கிடங்கில் இருந்து விண்ணை மூட்டும் தீ பிழம்பு எழுப்பும் காட்சிப் பதிவாகியுள்ளன.

மற்றொரு காணொளியில் விமான நிலையம் அருகே புகை மற்றும் குண்டு வெடிப்பு சத்தம் கேட்கும் காட்சி பதிவாகியுள்ளன.

இதுகுறித்து கிரிமியா ஆளுநர் செர்ஜி அக்சியோ னோவ் கூறும்போது, வெடி மருந்து கிடங்கு மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

பல தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கிரிமியா பாலமும் தற்காலிகமாக மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பாக உக்ரைன் தரப்பில் கூறும் போது, கிரிமியாவின் ஒக்ய பிரஸ்கி நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மற்றும் ரஷ்ய இராணுவ கிடங்குகள் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு கிரிமியா பாலம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பாலமும் சேதமடைந்தது.

இந்த நிலையில் கிரிமியா பகுதியில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வெடிமருந்து கிடங்கில் எரியும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக நடந்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இந்த தாக்குதலில் உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கிரிமீயா பாலத்தில் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாலம் மூடப்பட்டுச் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுக் கடந்த பெப்ரவரியில் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version