உலகம்

குழந்தை பெற்றால் ரூ.5.66 லட்சம்: ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சீன நிறுவனம்

Published

on

ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சீன நிறுவனம்!

சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக 1980 முதல் 2015 வரை “ஒரு குழந்தை கொள்கை” நீடித்தது. இதனால் தம்பதியினர் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

மக்கள் தொகை வல்லுநர்கள், இந்த கொள்கை அமல்படுத்தப்பட்டபோதே இதன் விளைவாக, சீனா ஒரு பணக்கார நாடாக ஆவதற்கு முன்பே, “வயதாகி விடும்” என்று எச்சரித்து வந்தனர். அது தற்போது உண்மையாகி வருகிறது. ஏனெனில், அங்கு தற்போது இளம்வயது பணியாளர்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது.

மேலும், கடன்பட்டுள்ள உள்ளூர் அரசாங்கங்கள் முதியோர்களை கவனிக்க இளம்வயதினர் அதிகம் இல்லாததால், அவர்களுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

இந்நிலையில் ட்ரிப்.காம் எனும் இணையதள வர்த்தக குழுமம், வரும் ஜூலை 1 முதல், தனது பணியாளர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் வெகுமதியை அறிவித்துள்ளது. அதாவது, பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு குழந்தைக்கும் சுமார் ரூ.5,66,000 ($6,897.69) வழங்கப்போவதாக கூறியிருக்கிறது.

“அதிகளவு முதியோர்கள், குறைந்தளவு இளைஞர்கள்” என்ற ஒரு ஏற்றத்தாழ்வான நிலையுடன் போராடும் சீனாவில் இந்த நிலையை எதிர்கொள்ள செய்வதற்காக பெரிய தனியார் நிறுவனம் செய்யும் முதல் முயற்சியாகும்.

400 மில்லியன் பயனர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஆன்லைன் பயண முகவர் நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், உலகெங்கிலும் உள்ள தனது ஊழியர்களுக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.1,14,000 ரொக்க மானியமாக வழங்குவதாகக் கூறியிருக்கிறது.

மேலும் இந்த திட்டத்திற்கு சுமார் 1 பில்லியன் யுவான் செலவாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டிரிப்.காம் நிர்வாகத் தலைவர் ஜேம்ஸ் லியாங் கூறும்போது, “பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று நான் பரிந்துரைத்து வருகிறேன். ஒரு சாதகமான கருவுறுதல் சூழ்நிலையை உருவாக்குவதற்கு,

தனியார் நிறுவனங்களாலும் தங்கள் பங்களிப்பை செய்ய முடியும்” என்றார். சீனாவில் 2021ல் பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 7.52 என இருந்த நிலையில், கடந்தாண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது.

தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும், ஆனால் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோதுகூட தம்பதிகள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள தயங்குகிறார்கள் எனவும் 2021ம் ஆண்டே அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தை பராமரிப்பு செலவு மற்றும் கல்வி செலவுகள், குறைந்த வருமானம், பலவீனமான சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் பாலின சமத்துவமின்மை ஆகியவற்றை இதற்கான காரணிகளாக இளைஞர்கள் குறிப்பிடுகின்றனர். பொருளாதார பின்னணியில் வரும் ஆண்டுகளில் இந்தியாவில் மக்கட்தொகை எவ்வாறு அமையும் என்றும் ஆர்வலர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version