உலகம்

மக்கள் போராட்டத்திற்கு மதிப்பளியுங்கள்! – சீனாவுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

Published

on

சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வேகமெடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக 40 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. வைரஸ் பரவல் அதிகரிப்பால் பல்வேறு மாகாணங்களில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீனா விதித்து வருகிறது.

ஜிங்ஜங்க் மாகாணத்தில் 100 நாட்களுக்கு மேலாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த மாகாணத்தின் உரும்யூ நகரில் கடந்த 24-ம் திகதி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

ஊரடங்கு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். இதனால் அங்கு தீ பற்றியபோது வீடுகளை விட்டு மக்கள் வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதற்கிடையே, சீன அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக அங்குள்ள மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் சீன அரசுக்கு எதிராகவும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை பொலிஸார் கைது செய்தனர்.

இதற்கிடையே, கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் சீனா முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதி வழியில் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு சீன ஆட்சியாளர்கள் உரிய மதிப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version