உலகம்

நீண்ட வரிசையில் காத்திருந்து ராணி எலிசபெத் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

Published

on

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நல கோளாறு காரணமாக கடந்த 8ம் திகதி  தனது 96 வயதில் மரணம் அடைந்தார்.

ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது. அவரது இறுதி சடங்கு எதிர்வரும் 19ம் திகதி லண்டனில் நடைபெறுகிறது. இதில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

இதனிடையே ஸ்காட்லாந்து தலைநகர் எடின்போராவில் வைக்கப்பட்டிருந்த ராணியின் உடலுக்கு முதலில் அரச குடும்பத்தினரும், பின்னர் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி விமானப்படை விமானம் மூலம் நேற்று முன்தினம் லண்டன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராணியின் உடலை மன்னர் 3-ம் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அரண்மனை அதிகாரிகளும், பணியாளர்களும் ராணிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.22 மணி அளவில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து ராணியின் உடல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ராணியின் சவப்பெட்டியின் மீது அவரது கிரீடம் வைக்கப்பட்டிருந்தது.

ஊர்வலத்தில் ராணியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டிக்கு பின்னால் மன்னர் 3-ம் சார்லஸ், அவரது மகன்களான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி நடந்து சென்றனர். அதேபோல் மன்னர் 3-ம் சார்லசின் உடன்பிறப்புகளான இளவரசி ஆனி, இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் எட்வர்டு ஆகியோரும் ராணியின் சவப்பெட்டி பின்னால் நடந்து சென்றனர்.

மன்னர் 3-ம் சார்லஸ், இளவரசி ஆனி, இளவரசர்கள் எட்வர்டு மற்றும் வில்லியம் ஆகியோர் ராணுவ உடைகளை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

அரச பதவிகளை துறந்த இளவரசர் ஹாரியும், பாலியல் புகாரில் சிக்கி அரச பதவிகளை இழந்த இளவரசர் ஆண்ட்ரூவும் சாதாரண உடையில் பங்கேற்றனர். அவர்களுடன் பாரம்பரிய உடைகளை அணிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் ராணியின் சவப்பெட்டியுடன் ஊர்வலமாக சென்றனர்.

இந்த பிரமாண்டமான ஊர்வலத்தை பார்ப்பதற்காக பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மினிஸ்டர் மண்டபம் வரை வழிநெடுகிலும் நூற்றுக்கணகக்கான மக்கள் திரண்டிருந்தனர். மதியம் 3 மணி அளவில் ஊர்வலம் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தை அடைந்தது. பின்னர் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வெஸ்ட்மினிஸ்டர் மண்டபம் திறக்கப்பட்டது. ஆனால் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த திங்கட்கிழமை மாலையில் இருந்தே பல கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.

ராணியின் இறுதி சடங்கு நடைபெறுகிற 19ம் திகதி காலை 6.30 மணி வரையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் லண்டனில் குவிந்து வருகின்றனர்.

இதையொட்டி லண்டனில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் பல கி.மீ. தூரத்துக்கு வரிசையில் காத்து நிற்கும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி விமான நிலைய சோதனை போன்றதொரு சோதனைக்கு பின்னர் மக்கள் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்துக்குள் நுழைந்து ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

#worldnews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version