செய்திகள்

உலக கோப்பை கால்பந்து – கத்தாரில் இன்று பிரமாண்ட ஆரம்பம்

Published

on

உலகின் 2-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து (FIFA) போட்டியாகும்.

இந்நிலையில், 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

டிசம்பர் 18-ம் தேதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன.

போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன. இந்த 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஏ பிரிவு – கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து

பி பிரிவு – இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

சி பிரிவு – அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து

டி பிரிவு – பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா

இ பிரிவு – ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான்

எப் பிரிவு – பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா

ஜி பிரிவு – பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

எச் பிரிவு – போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். டிசம்பர் 2-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றான நாக் அவுட்டுக்கு தகுதி பெறும். டிசம்பர் 3 முதல் 6-ம் தேதி வரை 2-வது சுற்று நடைபெறும். இதில் 16 நாடுகள் விளையாடும். அதில் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்குள் நுழையும்.

டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் கால் இறுதியும், 13 மற்றும் 14-ம் தேதிகளில் அரை இறுதி ஆட்டங்களும் நடைபெறும். இறுதிப் போட்டி டிசம்பர் 18-ம் தேதி நடக்கிறது. உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா-தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும். இதனால் யார் உலக கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க நாளில் ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது. ஏ பிரிவில் உள்ள கத்தார்-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன. இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முன்னதாக இரவு 7.30 மணிக்கு பிரமாண்ட தொடக்க விழா டோகாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அலகோர் அல்பயத் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்ற அணி உலக கோப்பையை வெல்லுமா? அல்லது புதிய அணி கோப்பையை கைப் பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு முறை சாம்பியனான இத்தாலி இந்த முறை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

#sports

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version