இலங்கை

பேராதனை போதனா வைத்தியசாலையில் மேலும் இருவருக்கு ஒவ்வாமை!

Published

on

பேராதனை போதனா வைத்தியசாலையில் மேலும் இருவருக்கு ஒவ்வாமை!

பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த யுவதிக்கு ஏற்றப்பட்ட தடுப்பூசியை செலுத்திய மேலும் இருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் (11) அனுமதிக்கப்பட்ட பொத்தபிட்டிய அலகல்ல பகுதியைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி மதுஷிகா ஜயரத்ன என்ற 21 வயதுடைய யுவதி ஊசி ஏற்றிய சிறிது நேரத்திலேயே உயிரிழந்திருந்தார்.

யுவதியின் உடல் நீல நிறமாக மாறியதாகவும், இதனையடுத்து உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தாதி ஒருவரால் இரண்டு ஊசிகள் செலுத்தப்பட்டமையினால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தாயார் குற்றம்சுமத்தியிருந்தார்.

இந்நிலையில், யுவதியின் மரணத்துக்கான உறுதியான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் பேராதனை வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பேராதனை மற்றும் கண்டி போதனா வைத்தியசாலைகள் உட்பட நாட்டின் ஏனைய வைத்தியசாலைகளுக்கு 10 தொகுதிகளுக்கும் அதிகமான மருந்துப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

சில சந்தர்ப்பங்களில் சில மருந்துகளுக்கு ஒவ்வாமை ஏற்படலாம். அவ்வாறு ஒவ்வாமை வைத்தியசாலைகளில் ஏற்பட்டால் ஒவ்வாமையிலிருந்து காப்பாற்ற முடியும். சிலவேளைகளில் எம்மால் அவ்வாறு செயல்பட முடியாது.அந்த நிலைமையே பேராதனை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ளது. இது துரதிஷ்டமான சம்பவமாகும். இருப்பினும் நாம் இதனை சாதாரண விடயமாக நினைக்கவில்லை. முழுமையாக அந்த மருந்துகளை அகற்றியுள்ளோம். அதனை நாம் பயன்படுத்த போவதில்லை. அதற்காக புதியதொரு மருந்தையே பயன்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

புதிய மருந்தையே நாம் தற்போது பயன்படுத்துகிறோம். சோதனைகளின் போது தவறுகள் இடம்பெறலாம். அதனை நாம் மறுக்கவில்லை. மருந்து இறக்குமதி செய்த பிறகு அது தொடர்பில் பரிசோதிக்கும் முறைமை எம்மிடமுள்ளது. அதனையே நாம் தற்போது முன்னெடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version