இலங்கை

வீட்டை உடைத்த இளைஞர்களிடமே சாவியை கையளித்த பொலிஸார்

Published

on

வீட்டை உடைத்த இளைஞர்களிடமே சாவியை கையளித்த பொலிஸார்

வவுனியாவில் அத்து மீறி வீட்டை உடைத்து குடியேறிய இளைஞர்களிடமே பொலிஸார் சாவியை கையளித்துள்ளமையினால் குறித்த வீட்டில் குடியிருந்தோர் நீதி கோரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

குறித்த போராட்டம் நேற்று (14.07.2023) இரவு 9.45 முதல் இன்று (15.07.2023) அதிகாலை 1.30 மணி வரை இடம்பெற்றுள்ளது.

இப் போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கந்தசாமி கோவில் வீதியில் உள்ள உணவகம் அருகில் உள்ள ஒழுங்கையில் ஆலயத்திற்கு சொந்தமான காணி ஒன்று நீண்டகாலமாக ஆலய உடன்படிக்கைக்கு அமைவாக அருளம்மா செல்வநாயகம் என்பவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

அவர் குறித்த காணியில் வீடமைத்து குடியிருந்துள்ளார் . கடந்த 2013 ஆம் ஆண்டு அருளம்மா மரணமடைந்த நிலையில் குறித்த வீட்டினை அவரது மூத்த ஆண் மகன் பராமரித்து வந்துள்ளதுடன், அவர் குறித்த வீட்டில் பிறிதொரு குடும்பத்தை வாடகைக்கு குடியமர்த்தி விட்டு தற்போது வெளிநாடு ஒன்றில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில், குறித்த வீட்டு உரிமையாளரான அருளம்மா அவர்களின் வெளிநாட்டில் வசிக்கும் மகள் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிற்கு வந்து வாடகைக்கு இருந்தோர், குறித்த வீட்டில் இல்லாத சமயம் வீட்டை உடைத்து உட்புகுந்து அங்கு சில நபர்களுடன் நின்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வாடகைக்கு குடியிருந்தோர் வவுனியா பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வாடகைக்கு இருந்தோரிடம் வீட்டை ஒப்படைக்குமாறும், சகோதரர்களுக்கு இடையிலான பிரச்சனையை நீதிமன்றத்தின் ஊடாக தீர்க்குமாறும் கூறியுள்ளனர். இதன் பின் வாடகைக்கு குடியிருந்தோர் அதில் தங்கியிருந்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்த வந்த அருளம்மாவின் மகள் வெளிநாடு சென்ற பின் நேற்று மதியம் வவுனியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் ஒருவரின் இணைப்பாளர் உள்ளடங்கிய குழு வாகனம் ஒன்றிலும், மோட்டர் சைக்கிளிலும் சென்று குறித்த வீட்டை உடைத்து அங்கு தங்கியிருந்துள்ளனர்.

இதனால் பாதிப்படைந்தவர் குறித்த விடயம் தொடர்பில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு தனது நிலையை கொண்டு வந்துள்ளார்.

அவரது உத்தரவுக்கமைய வவுனியா பொலிஸார் முறைப்பாட்டை பதிவு செய்ததுடன் விசாரணைகளையும் மேற்கொண்டனர். எனினும், இதன்போது வீட்டை உடைத்து உட்புகுந்தவர்களிடம் வெளிநாட்டிற்கு சென்றுள்ள மகள் சட்டத்தரணி ஊடாக வழங்கிய ஆவணம் இருப்பதாக கூறி வீட்டு சாவியை கொடுத்து விட்டு திங்கள் கிழமை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதாக கூறி இரு தரப்பையும் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version