இலங்கை

இலங்கையில் வாகனம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

Published

on

இலங்கையில் வாகனம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

கொழும்பை அண்டிய பிரதேசத்தில் முகமூடி வேடமிட்டு வந்த கும்பல் ஒன்று முச்சக்கர வண்டி மற்றும் வான் ஒன்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய, அவர்களை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பன்னிப்பிட்டிய மஹல்வராவ சந்திக்கு அருகில் தலைக்கவசம் மற்றும் முகமூடி அணிந்திருந்த நபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முச்சக்கரவண்டி சாரதியிடம் மகமன்ன பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். அதன்படி முச்சக்கரவண்டி சாரதி குறித்த நபரை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மாகம்மன பிரதேசத்தில் உள்ள பக்க வீதியொன்றில் பயணித்த போது சந்தேகத்தின் காரணமாக வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

இதன்போது அங்கு வந்த ஆயுதம் தாங்கிய கும்பல் முச்சக்கரவண்டி சாரதியை தாக்கிவிட்டு 2500 ரூபா, கைத்தொலைபேசி மற்றும் முச்சக்கரவண்டி என்பனவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி கஹதுடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்று சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த சந்தேகநபர்கள் இங்கிரிய பிரதேசத்தில் வான் ஒன்றினையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வான் ஒன்று இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. வான் சாரதி தனது நண்பரை சந்திப்பதற்காக இங்கிரிக்கு வந்த போது சந்தேகநபர்கள் வானை மறித்து தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் வந்த முச்சக்கரவண்டியை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு ஓடியதுடன், வீதியகொடையில் வீதியொன்றில் விடப்பட்ட நிலையில் கொள்ளையிடப்பட்ட வானை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து, கொள்ளைக் கும்பலைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன்,வாகனம் வைத்திருப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version