இலங்கை

நலன்புரி உதவித்திட்ட பிரச்சனையை தீர்க்க நிதி வசூலிக்கும் அவலம்…!

Published

on

இது இலங்கையின் பல இடங்களில், அதுவும் குறிப்பாக தமிழர் தாயகங்களில் மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது.

இது தொடர்பில் குற்றம் சாட்டும் மக்கள், குறித்த பட்டியலில் தமது பெயர் நீக்கப்பட்டமை தொடர்பில் ஆட்சேபனை செய்வதற்கான விண்ணப்பத்தை வழங்குவதில் கூட நிதி வசூலிப்பு மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இவ்வாறான தவறுகளை நிவர்த்தி செய்வதுடன் குறித்த நிதி வசூலிப்பை உடன் நிறுத்தவதற்கான நடவடிக்கையையும் யாழ் மாவட்ட அரச அதிபர் எடுக்கவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நிதி வசூலிப்பு

இந்த நிதி வசூலிப்பு விடயத்தினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன், இது தொடர்பான முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,

“சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய குறித்த தரவுகள் பிரதேச செயலகங்களில் அண்மைக்காலத்தில் உள்வாங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டமையால் மக்களுடனான தொடர்பும், அவர்களது குடும்ப நிலைமை தொடர்பான விபரங்களும் அவர்களுக்கு போதியளவில் இருந்திருக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் உண்மையான நிலைப்பாடும், தேவையானவர்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்ட நிலை உருவாகியுள்ளது.

அதேவேளை தற்போது சமுர்த்தி பெறுகின்ற வறிய குடும்பங்கள் பலரது பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சமூக நலன்புரி நன்மைகள் சபையின் பயானாளி தெரிவுக்கு குறித்த திட்டத்தில் உள்வாங்கப்படாத மக்களை மேன்முறையீடு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

மக்கள் கோரிக்கை

இதனால் தற்போது ஒவ்வொரு பிரதேச செயலகங்களின் முன்றலிலும் நூற்றுக்கணக்கிலான மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து ஒன்லைன் (நிகழ்நிலை) முறை ஊடாக ஆட்சேபனைகளை விண்ணப்பிக்குமாறும், அதனை பிரதேச செயலகங்கள் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த விண்ணப்பங்களை ஏற்பதில் பிரதேச செயலகங்களில் உள்ள வளப் பற்றாக்குறை மற்றும் இதர காரணங்களால் நிவர்த்தி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதால் தனியார் முகவர்கள் நிலையங்கள் இதனை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டிவருவதுடன், அதற்காக 300 ரூபா முதல் அதிக நிதி அறவீடு செய்யப்பட்டு வருவதாகவும், குறித்த விண்ணப்பத்தை விண்ணப்பிப்பதற்கே தாம் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாகவும் வறிய மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே வறிய மக்களுக்கான குறித்த திட்டத்தை மிக நேர்த்தியான முறையில் தேவையான பயனாளிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யும் வகையிலும் இவ்வாறான நிதி வசூலிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் யாழ் மாவட்ட செயலகம் மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாது இவ்வாறான தவறான அல்லது மக்களின் தேவை கருதியதான தரவுகளை திரட்டும் போது அதனை துல்லியமாக, குறைபாடுகள் மற்றும் தவறுகள் ஏற்படாதிருப்பதற்கு அரச அதிகாரிகள் அதிக அக்கறை காட்டவேண்டும்.” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version