இலங்கை

நான் விடுதலைப் புலி!! எச்சரித்த பிள்ளையான்

Published

on

தமிழ் மக்களுடைய காணிகளைச் சிங்களவர்கள் அபகரித்ததாலேயே நான் விடுதலைப் புலிகளில் இருந்து யுத்தம் செய்தேன்’ என மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

மேலும், மகாவலி திட்டப் பகுதியில் மண் அகழ்வு மற்றும் சில விடயங்களை நிறுத்துமாறு மகாவலி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மகாவலி மற்றும் மேச்சல்தரை தொடர்பான விசேட கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (26.06.2023) இடம்பெற்றுள்ளது.

இதன்போது இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, இன்று நாட்டின் நிலைமை என்ன? பொருளாதார நிலை என்ன? வெளிநாட்டு மக்கள் நிலை எவ்வாறு? என்ற விடயங்களைக் கதைக்க வேண்டும் அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பக்கமாகக் கருத்து தெரிவிக்கின்றனர்.

நான் புலிகளில் இயக்கத்தில் இருந்து வந்தவன். எங்களுடைய காணிகளைச் சிங்களவர்கள் அபகரித்ததால் யுத்தம் செய்தோம். இது நான் முதல் இருந்த நிலை. அதை வைத்து இப்போது கதைக்க முடியாது பிரயோசனமில்லை. அதனால் தான் நான் அரசியலுக்கு வந்தேன்.

எங்கள் மக்களை ஒரு பக்கம் சமப்படுத்தவும் மறுபக்கம் அரசாங்கத்தைச் சமப்படுத்தவும் வேண்டும். அதற்காக இரு பக்கமும் ஒன்றிணைந்து விசேடமாக ஜனாதிபதியுடன் கதைத்துப் பேசி நாட்டின் சட்டங்களை மாற்ற வேண்டும். அதனை மாற்றுவதற்கு வேலை செய்யவேண்டும் இல்லாவிடில் வேலையில்லை.

நாட்டின் நிர்வாக முறை மாற்ற வேண்டும் என அரகலயினர் ஆர்ப்பாட்டம் செய்தனர் மகாவலி மாறியதா? ஆசிரியர்கள் மாறினார்களா? அரசியல்வாதிகள் மாறினார்களா ? பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் மாறினார்களா? வேலை இல்லையே? இவ்வாறு எதுவுமே மாற்றாமல் எல்லாத்தையும் சமனாக்கு என்றால் எப்படி சமனாகும்.

எனவே, மாவட்ட நிர்வாக அதிகாரிகள், அரசியல் நிர்வாக அதிகாரிகள் கலந்துரையாடி எதிர்கால திட்டம், நாங்கள் என்ன செய்ய வேண்டும், நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை யோசியுங்கள்.

இந்த மகாவலி திட்டப் பகுதியில் மண் அகழ்கின்றனர் இதை யார் அகழ்கின்றார்கள்? இவ்வாறான சில விடயங்களை நிறுத்துமாறு உங்கள் அமைச்சருக்கு உங்கள் பணிப்பாளரிடம் தெரிவியுங்கள் என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்தின், நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள். கமலநல அதிகாரிகள், விவசாயிகள் கால்நடை பண்ணையாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version