இலங்கை

நாவலரின் உருவச்சிலை திறந்து வைப்பு!

Published

on

நேற்று மாலை 5மணிக்கு கீரிமலை கடற்கரையில் நாவலர் பெருமான் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது

கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் முயற்சியால்,

கீரிமலை கடற்கரையில் நாவலர் பெருமான் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.

நாவலர் பெருமான் சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றியவராவார்.

அவர் யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார்.

இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும் தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்.

வரலாற்றுக்கு முற்பட்ட சமயமாகவும், ஈழம் வாழ் மக்களின் பெரும்பாலானோரது உள்ளத்துள் ஒளி விளக்காய் சுடர்விட்டிலங்குவதுமான சைவ சமயம் அந்நியரது செல்வாக்கு வலிவுற்றிருந்த காலத்தில் சிறிது நலிவுற்றிருந்தது.

இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு வந்த அந்நிய ஆட்சியாளர் அரசியலாதிக்கத்தைக் கைப்பற்றவும் தற்சமயம் கொள்கையை பரப்பவும் எண்ணங்கொண்டு கல்வி வழிப்பிரசாரம் செய்யத் தலைப்பட்டனர்.

அந்நியவெற்று நாகரீகப் போக்கில் ஈடுபாடு கொண்ட மக்கள் சுயமசய கலாசார வழிகளை மறந்து வாழ்வாராயினர்.

இவ்வாறு சைவ சமயம் நலிவுற்றிருந்த வேளையில் நாவலர் பெருமான் தனது சொல்லாலும் எழுத்தாலும் மக்கள் அகக் கண்களைத் திறந்து அவல நிலையை அவர்களுக்கு உணர்த்தியதோடு சைவமும், தமிழும் மீண்டும் புத்துயிர் பெறுவதற்காக தம்மாலியன்ற அத்தனை பணிகளையும் செய்தார். அவரின் கல்விப் புலமையையும், நாவன்மையை யும், சைவத் தமிழ் பணிகளையும் பாராட்டி திருவாடுதுறை ஆதீனம் அவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது.

சைவம் காத்த நாவலர் பெருமானை சைவமக்கள் ஐந்தாம் சமயக்குரவர் எனப் போற்றுகின்றனர்.

சிவ சமயத்தை அழிய விடாது பாதுகாக்க நாவலர் பல முயற்சிகளை மேற்கொண்டார். சைவ சமயத்தவர் ஒரு சிலரிடம் காணப்பட்ட தவறான பழக்க வழக்கங்கள், செயல்கள் என்பவற்றை நீக்க முயன்றார். சைவப் பாடசாலைகளை நிறுவினார்.

திருக்கேதீஸ்வரம், கீரிமலைச் சிவன் கோயில் என்பனவற்றின் தொன்மைச் சிறப்புக்களை மக்களுக்கு எடுத்துக் கூறி அவற்றைப் புனரமைத்து நித்திய, நைமித்திய பூஜைகளுக்கு வழிவகுக்குமாறு சைவ மக்களுக்கு விஞ்ஞாபனம் விடுத்தார்.

தம் வாழ்நாள் பூராவும் தமிழுக்கும் சைவத்துக்கும் சேவையாற்றி வந்த நாவலர் பெருமான் 1879ம் ஆண்டு கார்த்திகை மாதம் மக நட்சத்திரத்தில் இறைபதம் அடைந்தார்.

#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version