இலங்கை

குடும்பஸ்தர் கொலை – மகன்கள் உட்பட மூவர் கைது!!

Published

on

தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் ஒருவர் வெட்டிக் கொன்ற சம்பவத்தின் மர்மம் துலங்கியுள்ளது. கொல்லப்பட்டவரின் இரண்டு மகன்களும், நண்பர் ஒருவருமே கொலையை செய்துள்ளனர்.

கொல்லப்பட்டவரின் 18,19 வயதான மகன்களும், அவர்களின் நண்பரான 19 வயதான மற்றொரு இளைஞனுமே கொலையை செய்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மிருசுவில் கரம்பகத்தில் நேற்று (31) காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (43) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு பகுதியை சேர்ந்த அவர், கரம்பகத்தில் திருமணம் முடித்திருந்தார். அவரது மனைவி 2 வருடங்களின் முன்னரே பிரிந்து சென்று விட்டார். அவர்களின் பிள்ளைகள் இருவரும், அம்மம்மாவின் பராமரிப்பில் வளர்ந்தனர்.

தந்தையார் வீட்டுக்கு செல்வது குறைவு என்றும் தெரிய வருகிறது.

நேற்று காலையில், கொல்லப்பட்டவரின் மூத்த மகன் கையில் வெட்டுக்காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர்களின் தந்தை கொல்லப்பட்டுள்ள நிலையில், மகனது காயம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரணசிங்க தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உதயானந்தன் பொலிஸ் சார்ஜன்ட் பார்த்தீபன் ஆகிய பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த தீவிர விசாரணையிலேயே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கையில் எவ்வாறு வெட்டுக்காயம் ஏற்பட்டது என பொலிஸார் வினவியபோது, நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத சிலர் வீட்டுக்கு வந்து, தந்தை தங்கியிருக்கும் இடத்தை காட்டுமாறு தம்மை அழைத்துச் சென்றதாகவும், தந்தை தங்கியிருந்த குடிலுக்கு அண்மையாக வந்ததும், தம்மை வாளால் வெட்டியதாகவும், தாம் தப்பியோடி விட்டதாகவும், தந்தையை அவர்கள் வெட்டிக் கொன்றதாகவும் தெரிவித்திருந்தனர்.

இது பற்றி ஏன் பொலிசாரிடம் தெரிவிக்கவில்லையென அவர்களிடம் விசாரணை நடத்திய போது, காலையில் பொலிஸார் விடயத்தை அறிந்து வருவார்கள் என நம்பியதாக குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த இளைஞனுடன் இன்னொரு நண்பர் வைத்தியசாலையில் தங்கியிருந்தார். தம்பியாரை பொலிஸார் விசாரித்ததில் கொலை மர்மம் துலங்கியது.

நேற்று அதிகாலை 1.30 மணியளவில் தானும், சகோதரனும், தந்தை தங்கியிருந்த குடிலுக்கு சென்று, கத்தியால் வெட்டிக் கொன்றதை ஒப்புக் கொண்டார்.

வீட்டிலிருந்து 3 கிலோ மீற்றர்கள் தொலைவிலுள்ள குடிலுக்கு நடந்து சென்று, இரகசியமாக குடிலுக்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளனர்.

19 வயதான மூத்த மகனே, தந்தையை முதலாவதாக வெட்டியுள்ளாார். தந்தையின் கழுத்தில் பெரிய வெட்டுக்காயம் ஏற்பட, தந்தை படுக்கையிலிருந்து எழுந்துள்ளார். இதன்போது தம்பியும் வெட்டினார். தம்பி வெட்டும் போது, தவறுதலாக அண்ணனின் கையிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

இருவரும் அவரை கழுத்து, முகம், நெஞ்சு, கையில் சரமாரியமாக வெட்டிக் கொன்றுள்ளனர்.

தந்தை தம்மை கொடுமைப்படுத்துவதால் அவரை கொன்றதாக பிள்ளைகள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

இதை அடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதான மூத்த மகனும், அவருடன் துணையாக தங்கி நின்ற நண்பரான 19 வயதான இளைஞனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்னர்.

கைது செய்யப்பட்ட 19 வயதான இருவரும் அண்மையில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். மூவருமே மீசாலையிலுள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றவர்கள்.

கொடிகாமம் பொலிசார் 4 மணித்தியாலங்களிற்குள் இந்த கொலை மர்மத்தை துலக்கியுள்ளனர். காலையில் 5 மணியளவில் இந்த சம்பவம் பற்றிய முறைப்பாடு செய்யப்பட்டது. காலை 9 மணியளவில் கொலை மர்மத்தை துலக்கிய பொலிஸார், சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இவர்கள் கொலை செய்ய பயன்படுத்திய கத்திகள் இரண்டை கொலை நடந்த இடத்துக்கு அருகில் உள்ள குளத்தில் இருந்து நேற்று மாலை நீண்ட தேடுதலுக்குபின் இரத்த கறைகளுடன் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றில் இன்று முற்படுத்தவுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version