அரசியல்

கடனை எதிர்ப்போர் நாட்டின் எதிரிகள்!!!

Published

on

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எவ்) வின் இலங்கைக்கான  கடன் உதவியை யாரும் எதிர்ப்பதாக இருந்தால் அவர்கள் நாட்டின் எதிரிகள் எனத் எதிர்க்கட்சியின் சுயாதீன எம்.பியான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஐ.எம்.எவ்.வின்நிபந்தனை மிகவும் கடினமானது  குறிப்பாக 2026ஆம் ஆண்டாகும் போது எமது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 15,3வரை அதிகரிக்க வேண்டும். அப்படியானால் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க வேண்டி ஏற்படுகிறது. அதற்காக அரசாங்கம் கட்டண அதிகரிப்புகளுக்கு செல்லவேண்டி ஏற்படும் என்றார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பாக ஜனாதிபதியின் பாராளுமன்ற உரை மீதான 2 ஆம் நாள் விவாதத்தில்   உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்த அவர்  மேலும் பேசுகையில்,

இலங்கை 2023 இல் வங்குரோத்து அடையும் நிலை இருக்கிறது. அதனால் இது தொடர்பாக முறையான மதிப்பீடொன்றை மேற்கொள்ளுமாறு 2016 மார்ச் மாதம் நானே முதலாவது ஆளாக  அமைச்சரவைக்கு கோரிக்கை விடுத்தேன். அதனடிப்படையில் அன்று அரசாங்கம் செயற்பட ஆரம்பித்தது. அதற்காக  ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க மற்றும் கலாநிதி சரத் அமுனுகம ஆகியோருக்கு நன்றி தெரிவி்க்கிறேன்.

நாட்டை வங்குராேத்து நிலையில் இருந்து பாதுகாக்க எமக்கு சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. 2017 ஜூன் மாதத்தில் இருந்து 2020 ஜூன் வரைக்கும் அந்த நடவடிக்கையை மேற்கொண்டு சென்றோம். அதன் மூலம்தான் நாங்கள் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு, நாட்டு நடவடிக்கையை பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் மேற்கொண்டு சென்றோம்.

ஆனால் 2019இல் கோட்டாபய ராஜபக்ஷ் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததுடன் இவர்கள் சர்வதேச நாணய நிதியத்தை உதைத்தார்கள். நாணய நிதியத்தில் இருந்து விடுபட்டு நாட்டின் இறையாண்மையை பாதுகாத்ததாக பிரசாரம் செய்தார்கள்.  அதேபோன்று உங்கள் நாடு ஸ்திரமற்ற நிலையில் இருக்கிறது. நாடு வங்குரோத்து அடையப்போகிறது என 2020 மார்ச் மார்ச் முதல் வாரத்தில் சர்வதேச நாணய நிதியம் இலங்கை மத்திய வங்கிக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தது.

நாடு இந்தளவு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு செல்வதற்கு காரணம், அன்று சர்வதேச நாணய நிதியம் இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பிய கடிதம் தொடர்பாக செயற்படாமல் தான்தோன்றித்தனமாக செயற்பட்டமையாகும். அதனால் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு உயிர்த்த ஞாயிறு  தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பைவிட பலமடங்கு விசாலமானதாகும். அதனால் இந்த பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அரசாங்கம் கட்டண அதிகரிப்புகளுக்கு செல்லவேண்டி ஏற்படும். அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான மூச்சுவிடுவதற்கான சந்தர்ப்பமே தவிர,பட்டாசு  கொளுத்தி கொண்டாடுவதற்கு  எதுவும் இல்லை. அத்துடன் நாணய நிதியத்தின் இந்த கடன் உதவியை யாரும் எதிர்ப்பதாக இருந்தால் அவர்கள் நாட்டின் எதிரிகள் என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version