இந்தியா

போதைப்பொருள், ஆயுதக் கடத்தல் – இந்தியாவில் கைதான இலங்கையர்கள்

Published

on

போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி செய்ததாகவும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 8 இலங்கையர்கள் உட்பட ஒன்பது பேரை இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

சி. குணசேகரன் என்ற குணாவும், புஷ்பராஜா என்ற பூக்குட்டி கண்ணாவும் சேர்ந்து போதைப் பொருள் கும்பல் ஒன்றை நடத்திவந்ததாக என்.ஐ.ஏ தெரிவிக்கிறது.

இவர்களுக்கான போதைப்பொருளை, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹாஜி சலீம் என்பவர் அனுப்பி வந்துள்ளார். இந்த போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கும்பல், இந்தியாவிலும் இலங்கையிலும் செயல்பட்டதாகவும் இரு நாடுகளிலும் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயன்றதாகவும் என்.ஐ.ஏ. தெரிவிக்கிறது.

இது தொடர்பான ஒரு வழக்கை கடந்த ஜூலை 8ஆம் திகதியன்று தாமாக முன்வந்து என்.ஐ.ஏ. பதிவு செய்தது.

இது தொடர்பாக என்ஐஏவின் டி.ஐ.ஜி. காளிராஜ் மகேஷ்குமார் தலைமையிலான அணி ஒன்று திருச்சி சிறப்பு முகாமில், கடந்த ஜூலை 20ஆம் திகதி சோதனைகளை நடத்தியது.

இந்த சோதனைகளின்போது, கைப்பேசிகள், சிம் அட்டைகள், ஹார்ட் டிஸ்க்கள், பென் டிரைவ்கள், மடிக்கணினிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதற்குப் பிறகு நேற்று, திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சி. குணசேகரன், புஷ்பராஜா, முகமது அஸ்மின், அழகப்பெரும சுனில் காமினி பொன்சேகா, ஸ்டான்லி கென்னடி ஃபெர்ணான்டோ, லாடியா சந்திரசேன, தனுஷ்க ரோஷான், வெள்ளே சுரங்க, திலீபன் ஆகிய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் முகமது அஸ்மின் மட்டும் ராமநாதபுரம் தேவகோட்டையைச் சேர்ந்தவர். மற்றவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் வேறு சில குற்றங்களுக்காக திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.

2021ஆம் ஆண்டில் இலங்கையைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் என்பவர் கொச்சிக்கு அருகில் உள்ள அங்கமாலியில் கைது செய்யப்பட்டார். ஹாஜி சலீமுடன் இருந்த தொடர்புக்காக கைது செய்யப்பட்ட அவரை விசாரித்ததில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து பல கோடி ரூபா கொடுக்கல் – வாங்கல் நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.

இந்தியாவை தளமாகப் பயன்படுத்தி, இலங்கைக்கு போதைப் பொருட்களையும் ஆயுதங்களையும் கடத்துவதில் முக்கிய புள்ளியாக சுரேஷ் ராஜன் இருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் விழிஞ்சம் துறைமுகத்திற்கு அருகில் படகு ஒன்றை சந்தேகத்தின் பேரில் இடை மறித்த பாதுகாப்புப் படையினர், அதனைச் சோதனையிட்டனர். அந்தச் சோதனையில் படகிலிருந்து 300 கிலோ ஹெரோயின், ஐந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், 1000 தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பாகவே கொச்சியைச் சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள், இந்த ஒன்பது பேரையும் கைது செய்துள்ளனர்.

#India #SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version