இலங்கை
சாறிக்கு பதில் மாற்று ஆடை! – ஆசிரியர் சங்கம் கோரிக்கை
நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்குள் ஆகக் கூடுதலான விலைகளை கொடுத்து சாறியை கொள்வனவு செய்யமுடியாது. ஆகையால், சாறியை கட்டுவதிலும் ஒசரியை கட்டுவதிலும் ஆசிரியைகள் கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் கல்வியமைச்சின் செயலாளரின் கவனத்துக்கும் கொண்டுவந்துள்ளது.
அரச அதிகாரிகள், அரச சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில், மாற்று ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாடசாலைகளுக்கு மோட்டார் சைக்கிள்களில் செல்லும் ஆசிரியைகள், சாறி மற்றும் ஒசரி அணிவதிலும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலைகளில் மாணவர்களுடன் செயற்பாட்டுடன் ஈடுபடுவதற்கு ஏற்ற ஆடைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் பின்லாந்து உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்த நாடுகளில் முன்னுதாரணமாகக் கொள்ளுமாறும் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login