அரசியல்

தமிழ்த் தேசிய இனம், மொழியாலும், இனத்துவ அடையாளங்களாலும் காலத்தால் முற்பட்டது!

Published

on

மொழியாலும், இனத்துவ அடையாளங்களாலும் காலத்தால் முற்பட்ட தமிழினம், தனக்கான அத்தனை அருமை, பெருமைகளையும் வகுத்தும் தொகுத்தும் வைத்திருந்தபோதும், காலவர்த்தமானப் பிறழ்வுகளால் அவற்றைக் கட்டிக் காக்க முடியாதிருந்த தசாப்தகாலப் பெருந்துயர்களைக் கடந்து, மீளவும், எங்கள் மண்ணில், எங்கள் மக்களின் ஒருங்கிணைவில், எங்கள் கலைகளுக்காய் விழா எடுக்க எங்களால் முடிகிறது என்பதைவிட வேறென்ன நிறைவிருக்கிறது? அந்த நிறைவைக் கொடுப்பதற்கும், கொண்டாடுவதற்குமான வாயிலை பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் பண்பாட்டுப்பெருவிழா திறந்திருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்றையதினம் (2022.10.22) நடைபெற்ற கலை பண்பாட்டுப் பெருவிழாவில் கலந்துகொண்டு  வாழ்த்துரை வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மனிதகுல நாகரிகத்திற்கே வழியமைத்துக் கொடுத்த, தொன்மையையும், தனித்தன்மைகளையும் கொண்டிருந்த தமிழர் தம் பண்பாடும், அதன் அடிப்படைக் கூறுகளான மொழி, நில, கலை, மரபியல்களும்,அரசியல், சமூக, பொருளாதாரக் காரணங்களால் சற்று முறைபிறழ்ந்து செல்லும் இன்றைய காலமும் சூழலும் உணர்ந்து, அதனைத் தன் செல்நெறி நோக்கிய மீள்திரும்பலுக்கு உட்படுத்த வழிகோலும் உயர் விழாவாய் இப்பண்பாட்டுப் பெருவிழா முன்னெடுக்கப்பட்டிருப்பது பெருமகிழ்வு.

எங்கள் இளைஞர்கள், மறந்தும் தங்கள் இனம் பற்றியோ, அதன் விடுதலை பற்றியோ ஒருபோதும் சிந்தித்துவிடக்கூடாதென்ற  ஒற்றைக் காரணத்திற்காக, அவர்கள் பல்வேறு வழிகளிலும் திட்டமிட்டு திசைதிருப்பப்படுகிறார்கள். உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை வடக்கில் உச்சவரம்பைத் தொட்டுள்ளதாக செய்திகள் சொல்கின்றன. அந்த நிலை மாற வேண்டும் என்றால், எங்கள் குழந்தைகளுக்கும், வளரிளம்பருவ இளைஞர்களுக்கும் தங்கள் இனம் மீதும் மொழி மீதும், கலை, கலாசாரம் மீதும் ஆழ்ந்த பற்றுதல் வரவேண்டும். அந்தப் பற்றுதலைத் தரும் வல்லமை இத்தகு நிகழ்வுகளுக்கு உண்டு என்பதால் தான் இந்தப் பண்பாட்டுப் பெருவிழாவை, நான் காலப்பெரும் பணியாகக் கருதுகிறேன்.

அதையும் தாண்டி,  தங்கள் பிரதேசத்தின் கலை அடையாளங்களைக் காக்கவும், அடுத்த தலைமுறைக்கு கடத்தவும் வேண்டும் என்ற காலக்கடமையை பச்சிலைப்பள்ளியின் இளைஞர் கூட்டம் ஒன்றுதான்  கையிலெடுத்திருக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி. இந்த மாவட்டம் மீதும், தங்கள் மண்ணின் மீதும் தாம் கொண்டிருக்கும் தீராக் காதலையும், எமக்குரித்தான அடையாளங்களை மீள நிறுவுவதனூடு தமிழ்த் தேசிய இனத்தின் அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கும் வகையிலான கலை, பண்பாட்டு அடையாளங்களைக் கட்டியெழுப்புவதில் தமக்கிருக்கும் காத்திரமான பங்கினையும் உணர்ந்து செயற்பட்டுள்ள உள்ளார்ந்த தீவிரத்தில், எங்களின் கலைகளையும், அடையாளங்களையும் அடுத்த தலைமுறை கைவிட்டுவிடாதென்ற ஒருபெரும் நம்பிக்கையை, எம் எல்லோர் மனங்களிலும் ஆழ வேரூன்றச் செய்யும் வகையில் இந்த விழா அமைந்திருப்பது தான், இப் பண்பாட்டுப் பெருவிழாவின் வெற்றி என்பது பெருமிதமளிக்கிறது.

ஏனெனில், தமது சொந்த மண்ணிலேயே அடிப்படை உரிமைகளற்ற, நசுக்கப்பட்ட இனமாக இருந்துகொண்டு தனது இருப்பைத் தக்கவைப்பதற்காய், அரச அடக்குமுறையாளர்களோடு எல்லாவழிகளிலும் போராடத் தலைப்பட்டுள்ள தமிழினத்தின் இருப்பை, அதன் மொழி, நில, கலை, கலாசார, மரபியல்களை மீள்கட்டமைப்பதன் மூலமே தூக்கிநிறுத்த முடியும் என்ற நிலை இன்று உருவாகியிருக்கிறது.

எத்தனையோ இடர்களுக்கும், தடைகளுக்கும், பொருளாதார இயலாமைகளுக்கும் மத்தியிலும், கடந்த ஒரு தசாப்தமாக தன் தனிப்பெரும் அடையாளங்களை அடியோடு இழந்தும், வெளிக்கொணரத்தகு களங்களற்றுமிருந்த தமிழ் மரபுக் கலைகளை இப்பெரு மேடையில் ஒருங்கிணைத்து, தனித்துவங்கள் மிகுந்த பச்சிலைப்பள்ளி மண்ணின் தன்னிகரில்லாக் கலைமரபுக்கு, இவ்விழா  மீள் அடையாளத்தை அளித்திருக்கிறது.

தமக்கான அத்தனை அடையாளங்களும் மிளிர, தம்மை அசைக்க முடியாத சக்திகளாக கட்டமைத்து வைத்திருந்த, விடுதலை வேண்டிப்போராடிய இனக்குழுக்கள் எல்லாமே தமது விடுதலைப் போரின் இலக்கை எய்தமுடியாது போகும்பட்சத்தில் இருப்பழிந்துபோவது தான் வரலாறு.

ஆனால் நாகரிகத்தின் உச்சியில் நின்று, சர்வ வல்லமை மிக்கதோர் சுதேசிய இனக்குழுவாகத் தன்னைக் கட்டமைத்துக்கொண்ட தமிழினம், தன்னைத் தகவமைத்துக்கொள்வதற்கான அரசியல் உரித்துக்கோரிய அறப்போரை அடியோடு இழந்து ஒரு தசாப்தத்தைக் கடந்த பின்னரும், உலக அரங்கில் தவிர்க்க முடியாத ஓர் சுதேசிய இனம் என்ற மிடுக்கோடு இன்றளவும் மிளிர்வதற்கு எங்கள் இனத்தின் தனித்துவான மொழி, பண்பாட்டு, கலை அடையாளங்களே காரணம்.

எம் மீட்பர்களின் இயலுமைகள் எல்லாம்இல்லாதுபோனபின்னர்கேட்பாரற்றுக் கொன்றுபுதைக்கப்பட்ட ஈழத்தமிழினத்தின் எச்சங்களைக்கூட விட்டுவைக்கும் திராணியற்ற சிங்கள பேரினவாதம், நிலப்பறிப்பென்றும், சிங்கள குடியேற்றம் என்றும், மொழி, இன அடையாளப் பறிப்பென்றும், சொந்த மண்ணிலேயே நிலங்களற்ற ஏதிலிகளாக  வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட எம்மீது, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் இன்னோர் அத்தியாயத்தை வலிந்து திணிக்கும் கையறு நிலையிலும், நாம் நிமிர்ந்துநிற்பதற்கு எங்களின் பண்பாட்டு அடையாளங்கள் தான் காரணம்.

உலகப் பந்தின் அற்ப உயிரினமாகச் சொல்லப்படும் மண்புழுவால் கூட, தன் வாழ்நாளில் நாற்பதாயிரம் தடவைகள் மண்ணைக் குடைந்து துளையிடும் தன்னலம் கருதாத செயற்பாட்டின் வழி, விவசாயிகளின் தோழனாக தனக்கான அடையாளத்தை உருவாக்க முடியுமெனில், ஏலவே தமக்கான தனித்துவ அடையாளங்களைக் கொண்ட தமிழ்த்தேசிய இனம் தன்னம்பிக்கையின் வழி தன்னை மீளக் கட்டமைக்க முடியும் என்பதற்கு கட்டியம் சொல்லத்தக்க கலை முயற்சியே இக் கலை பண்பாட்டுப் பெருவிழா.

மொழியையும், பண்பாட்டையும்
வளர்ந்தொளிரச் செய்வதன் வழி, தமிழினம் தன்னியல்புகளைப் பெற்று மீளவும் மிளிரும் வகையில், கெளரவ தவிசாளர் சுரேன் தலைமையில், சபையின் உப தவிசாளர் கஜன், மற்றும் உறுப்பினர்கள், செயலாளர், உத்தியோகத்தர்கள், கலையுலகத்தினர், மொழி ஆர்வலர்கள் என அனைவரினதும் கரங்களின் இணைவால், நிகழ்ந்தேறியிருக்கும் இப்பண்பாட்டுப் பெருவிழா சிறக்கவும், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கலையுலகப் பணி தொடரவும், மேலும் மேலும் எமக்கான அடையாளங்களை நிறுவுவதற்கான முன்னெடுப்புக்களை அவர்கள் மேற்கொள்ளவும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்து நிறைவுசெய்கிறேன் – என்றார்.

#Srilankanews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version