இலங்கை

வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்துக்கு வரி கிடையாது!

Published

on

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி அறவிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது..

உத்தியோகபூர்வ வங்கி முறையின் ஊடாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி அறவிடப்படாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் முதல் அமுலுக்கு வரும் மாதாந்த வருமான வரி தொடர்பான சமீபத்திய நிலவரத்தை விளக்கிய அமைச்சர், உத்தியோகபூர்வ வங்கி முறைக்கு வெளியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு இந்த வரிச்சலுகைக்கு உரிமையில்லை என்று கூறினார்.

“நீங்கள் சம்பாதித்தவுடன் பணம் செலுத்தும் வரி முறை இந்த நாட்டில் நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளி நாட்டின் வரிக் கொள்கைகளுக்கு உட்பட்டவர். எனவே, அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் அந்த நாடு தொடர்பான வரித் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

எனவே, அவர்கள் இந்த நாட்டுக்கு அனுப்பும் வெளிநாட்டுப் பணத்துக்கு இனி ஒருபோதும் வரி விதிக்க மாட்டோம். அவ்வாறு செய்வது நெறிமுறை அல்ல. ஆனால், அந்நாட்டின் அதிகாரப்பூர்வ வங்கி முறை மூலம் வெளிநாட்டு நாணயங்களில் பணம் அனுப்பப்பட்டிருந்தால் மட்டுமே இந்த வரிச் சலுகை கிடைக்கும்.

மற்றபடி சட்ட விரோதமான வேறு வழிகளுக்கு இந்த நாட்டுக்கு பணம் அனுப்பி வரிச்சலுகையை எதிர்பார்க்காதீர்கள். அவர்கள் கண்டிப்பாக புதிய வருமான வரி விதிப்புக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்”. என்றார்

மேலும் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு பணம் அனுப்பும் நபர்கள் தொடர்பில் மத்திய வங்கி மற்றும் இலங்கை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இதுவரையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version