அரசியல்

‘மணமகள் இல்லாத திருமணம்’! – எதிரணிகள் இன்றி நாளை கூடுகிறது ‘தேசிய பேரவை’

Published

on

தேசியக் கொள்கைகளை வகுப்பதற்கான ‘தேசிய பேரவை’யில் அங்கம் வகிக்கப்போவதில்லை என்று எதிரணியிலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் இன்று (28) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

‘தேசிய பேரவை’யின் முதலாவது கூட்டம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (29) நடைபெறவுள்ள நிலையிலேயே, மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, உத்தர லங்கா சபாகய (விமல் கூட்டணி), டலஸ் அணி என்பனவே தமது தரப்பில் எந்தவொரு உறுப்பினரும் தேசிய பேரவையில் இடம்பெறமாட்டார்கள் என அறிவித்துள்ளன.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், எதிரணி பிரதம கொறடா ஆகியோர் ‘தேசிய பேரவை’யில் பதவி நிலை உறுப்பினர்களாவர். எனினும், நாளைய கூட்டத்தில் பங்கேற்கபோவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்துள்ளார். இதே நிலைப்பாட்டில்தான் எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்லவும் உள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப்பதவி எதிரணிக்கு வழங்கப்படாவிட்டால், தேசிய பேரவையை ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணிக்கும் எனவும் இடித்துரைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி வைத்துள்ள மனோ கணேசன், பழனி திகாம்பரம், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் பெயர்களும் ‘தேசிய பேரவை’க்கு பெயரிடப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் நாளைய கூட்டத்தில் பங்கேற்பது குறித்து உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

விமல் வீரவன்ச தலைமயிலான உத்தர லங்கா சபாகயவில் அங்கம் வகிக்கும் வாசு தேவ நாணயக்கார, உதய கம்மன்பில, அத்துரெலிய ரத்தன தேரர் , திஸ்ஸ விதாரன ஆகியோரின் பெயர்களும், தேசிய பேரவைக்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

‘தேசிய பேரவை’க்கான உறுப்பினர்கள் கடந்த 23 ஆம் திகதி சபாநாயகரால் பெயரிடப்பட்டனர்.

டக்ளஸ் தேவானந்தா,
நஸீர் அஹமட்,
டிரான் அலஸ்,
சிசிர ஜெயகொடி,
சிவநேசத்துரை சந்திரகாந்தன்,
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ,
ரவூப் ஹக்கீம்,
பவித்ரா வன்னியாராச்சி,
வஜிர அபேவர்த்தன,
ஏ.எல்.எம் அத்தாவுல்லாஹ்,
திஸ்ஸ விதாரன,
ரிசாத் பதியுதீன்,
விமல் வீரவன்ச,
வாசுதேவ நாணயக்கார,
பழனி திகாம்பரம்,
மனோ கணேசன்,
உதய கம்மன்பில,
ரோஹித்த அபேகுணவர்த்தன,
நாமல் ராஜபக்ச,
ஜீவன் தொண்டமான்,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
அத்துரலியே ரத்தன தேரர்,
அசங்க நவரட்ன,
அலி சப்ரி ரஹீம்,
சி.வி விக்னேஸ்வரன்,
வீரசுமன வீரசிங்க,
சாகர காரியவசம்,

தேசிய பேரவையில் இடம்பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை விதித்துள்ள நிலையில், தமது அனுமதியின்றியே பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கட்சிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரணிகளின் பங்களிப்பு இன்றி நடைபெறும் ‘தேசிய பேரவை’க் கூட்டமானது மணமகன் இல்லாத திருமணம் போலவே அமையும் என்று எதிரணிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version