அரசியல்

அரசாங்கத்தை பயணக் கைதியாக்க முயற்சி!

Published

on

” நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதனை ஓர் வாய்ப்பாக பயன்படுத்தி அரசாங்கத்தை பணயக் கைதியாக்குவதற்கு விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினர் முயற்சிக்கின்றனர். இது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. பிரிவினைவாத நிபந்தனைகளை ஏற்கக்கூடாது”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிடுவதற்கு தயாராகவே உள்ளனர், அது நடக்க வேண்டுமானால் சில நிபந்தனைகளை நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ்க் கட்சிகளால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பொன்சேகா இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா டயஸ்போரா என்பதற்குள் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து இனத்தவர்களும் உள்ளனர். இந்த அரசாங்கம்மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால் முதலீடுகளை மேற்கொள்ளலாம். ஆனால் ஊழல் ஆட்சியெனில் எவரும் முன்வரமாட்டார்கள் என்பதையும் ஏற்றாக வேண்டும். இந்த அரசாங்கம்மீது நம்பிக்கையின்மையால் முதலிட எவரும் முன்வர விரும்புவதில்லை. சாதாரணமாககூட பணம் அனுப்பமாட்டார்கள்.

தற்போதைய நெருக்கடி சூழ்நிலையில், குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றார். அரசாங்கத்தை பணயக் கைதியாக பயன்படுத்துவதற்கு முற்படுகின்றார். பிரிவினைவாத நிபந்தனைகளை ஏற்கமுடியாது. பெரும்பாலான மக்கள் எதிர்க்கும் அரசியல் காரணிகளையும் அனுமதிக்க முடியாது. இது விடயத்தில் நிதிக்காக அரசாங்கமும் அடிபணிந்துவிடக்கூடாது.

அதேவேளை, இராணுவ குறைப்பு செய்யப்பட வேண்டும் என்ற ஜெனிவா யோசனையும் ஏற்புடைய விடயம் அல்ல. அதனை ஏற்க முடியாது. இராணுவ பலத்தை எண்ணிக்கையும் மதிப்பிடக்கூடாது. இராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை வைத்துதான் கணக்கிட வேண்டும். இலங்கை இராணுவம் இன்னமும் தொழில்நுட்பம் ரீதியில் மேம்படவில்லை. எனவே, படைகுறைப்பு யோசனை ஏற்புடையது அல்ல.

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை. 40 ஆயிரம் பேர் கொல்லப்படவும் இல்லை. ஓரிரு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம். அது தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தலாம். இதனை போர் முடிந்த கையோடு செய்யாததாலேயே பிரச்சினை ஏற்பட்டது ” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version