அரசியல்

பயங்கரவாத தடைச் சட்டத்தால் நாட்டுக்கே ஆபத்து!

Published

on

நாடு தற்போதுள்ள நெருக்கடிக்குள் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தினால் அது நாட்டின் பொருளாதார மீள் எழுச்சியில் பாதிப்பையே ஏற்படுத்துமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இதுவரைகாலமும் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டுவந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போது சிங்களத்தில் கையெழுத்திடுவதன் மூலம் அவரின் நிலைப்பாடுகளும் மாறி வருவது தெளிவாகின்றது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வடக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் மண்ணெண்ணெய் இல்லாது கஷ்டப்படுகின்றனர்.

விவசாயிகள் நீரிறைக்கும் இயந்திரத்துக்கும் மீனவர்கள் தமது படகு மற்றும் இயந்திரங்களுக்கும் மண்ணெண்ணெய் இல்லாது அவஸ்தைப்படுகின்றனர். இந்த விடயத்தை பல தடவைகள் அரசாங்கத்துக்கு எடுத்துக்கூறியும் அதற்கு எந்த விதமான பதிலும் கிடைக்க வில்லை. கிடைத்த ஒரேயொரு பதில் 87 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் 340 ரூபாவாக 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு மட்டுமே.

கஷ்டப்படுகின்ற விவசாயிகளுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் இதுவரைக்கும் எந்த நிவாரணமும் கொடுக்கப்படவில்லை. இந்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் கூட மண்ணெண்ணெய் பாவிப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென்ற முன்மொழிவு உள்ளது. ஆனால் ஒதுக்கீட்டில் இந்த நிவாரணத்துக்காக ஒரு சதம் கூட ஒதுக்கப்படவில்லை.

இது மத்தியவர்க்கம் மற்றும் அதற்கு மேற்பட்ட வர்க்கத்தை அமைதியாக்கும் அரசின் நோக்கத்தையே காட்டுகின்றது. மத்தியவர்க்கத்தின் கீழ் உள்ளவர்களை அரசு பார்க்க வேண்டும். ஆனால் இங்கு மத்தியவர்க்கம் மற்றும் அதற்கு மேற்பட்ட வர்க்கத்தை அமைதியாக்கி சமாளிக்க அரசாங்கம் முற்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக துப்பாக்கி சூட்டு மரணங்கள் அதிகரித்துள்ளன.

அந்த மரணங்களை தடுக்கவோ சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவோ பொலிஸாரை பயன்படுத்தப்படவில்லை. ஆனால் மக்களின், மாணவர்களின் போராட்டங்களை அடக்கவே பொலிஸ் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு இடத்தில் 500 பேர் ஆர்ப்பாட்டம் செய்தால் அங்கு 1000 பொலிஸார் நிற்கின்றனர்.

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழக்கமாக ஆங்கிலத்தில்தான் கையெழுத்திடுவார் ஆனால் அவர் ஜனாதிபதியானதன் பின்னர் 3 தடுப்புக் காவல் சட்ட ஆவணங்களிலும் சிங்களத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அவரின் மன நிலை மாறி வருவதனைக் காண முடிகின்றது என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version