இலங்கை

மக்கள் பாவனைக்கு தாமரை தடாகம்

Published

on

இலங்கை மக்களுக்கு புத்தம் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான தாமரை கோபுரத்தின் செயல்பாடுகளை செப்டம்பர் 15 முதல் ஆரம்பிக்கத்
திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் 113 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரத்தின்
செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், பல புதிய அனுபவங்களை வழங்க கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த தாமரைக் கோபுரத் திட்டத்திற்கு சீன நிறுவனம் 88.65 மில்லியன் அமெரிக்க டொலர்
கடனுதவியை வழங்கியுள்ள நிலையில், மீதித் தொகையை இலங்கை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக சீனாவிடம் பெறப்பட்ட கடன் தவணை 2024 ஆம் ஆண்டிற்குள் செலுத்தி
முடிக்கப்பட உள்ளது. அத்துடன் ஏற்கனவே கடனாகப் பெறப்பட்ட சுமார் 66 மில்லியன் அமெரிக்கடொலர்கள் மீளச் செலுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இவ்வருடம் மார்ச் மாதம் திறைசேரியின்
கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. மேலும் அதன் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் கணக்காய்வாளர்
நாயகம் திணைக்களத்தினால் கணக்காய்வு செய்யப்படுகிறது.

தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு
பெப்ரவரி 28 ஆம் திகதி சீன நிறுவனம் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்து மீண்டும் இலங்கை
அரசிடம் ஒப்படைத்தது.

உலகிலுள்ள செல்வந்த நாடுகளில் இருப்பதைப் போன்ற பொழுதுபோக்கு மற்றும் புதிய
தொழில்நுட்ப வசதிகளை வழங்க திட்டமிட்டிருப்பதாக கொழும்பு லோட்டஸ் டவர் தனியார்நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு சாகச விளையாட்டுகளான ஸ்கை டைவிங் (Sky diving ) மற்றும் பங்கி ஜம்பிங் (Bungee
jumping) ஆகியவையும் இதில் அடங்கும்.

இதுவரை 80 சதவீதமான உள்நாட்டு முதலீட்டாளர்களும் 20 சதவீதமான வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தாமரை கோபுரத்தில் முதலீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். டயலொக் டெலிகொம் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் என்பன தலா 200 மில்லியன் ரூபா முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன.

தாமரைக்கோபுரத்தின் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நுழைவுச் சீட்டைக் கொள்வனவு செய்து, அனைவரும் இதனைப் பார்வையிடவும் புதிய அனுபவங்களை பெறவும் முடியும். நுழைவுச் சீட்டொன்றின் விலை 500 ரூபா என்பதோடு விசேட நுழைவுச் சீட்டின் விலை 2,000 ரூபாவாகும். பார்வையிட வரும் வெளிநாட்டவர் ஒருவருக்கான நுழைவுச் சீட்டு 20 அமெரிக்க டொலர்களாகும்.

அடுத்த சில மாதங்களில் நுழைவுச் சீட்டுக்கு பதிலாக QR தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

10.5 ஏக்கர் நிலப்பரப்பில் தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதுவரை 58 முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதில் 22 பேர் ஒப்பந்தம் மேற்கொள்ள இணங்கியுள்ளனர். 15 பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காக எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிவரை முன்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் தாமரைக்கோபுர செயற்பாடுகளை மேலும் வெற்றிகரமாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தாமரை கோபுரத்திற்கு வரும் பொதுமக்களுக்காக தரை தளம், பிரபலமான உணவகங்கள், பப் (Pub)
மற்றும் நினைவுப்பரிசு அங்காடிகள் (souvenir shop) என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதோடு, பல
முன்னணி வணிக வங்கிக் கிளைகளும் தரை தளத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் தளம் , அலுவலக வசதிகளுக்காக பயன்படுத்தப்படுவதுடன் டிஜிட்டல் சினிமா அனுபவத்தைப் பெறவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மூன்றாவது தளத்திலுள்ள மாநாட்டு மண்டபம், ஒரே நேரத்தில் சுமார் 400 பேருக்கான இருக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், திறந்த தளம் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய தொழில்நுட்பத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள இலங்கையில் உள்ள மிகவேகமாக இயங்கக்கூடிய மூன்று மின் தூக்கிகள் தாமரைக் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அனைத்து அனுபவங்களையும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பார்த்தும் அனுபவித்தும்
மகிழ முடியும் என்று கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version