அரசியல்

‘கோட்டா கோ கம’வால் 49 லட்சம் ரூபா சேதம்!

Published

on

‘கோட்டா கோ கம’வால் காலி முகத்துவாரப் பகுதியில் ஏற்பட்ட சேதம் சுமார் 49 லட்சம் ரூபா என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை பெறுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக குறித்த அதிகாரசபை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பின்படி, காலி முகத்திடலைச் சூழவுள்ள பகுதிக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு செயற்பாட்டாளர்களிடம் இருந்து நட்டஈடு பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அண்மையில் பணிப்புரை விடுத்தார்.

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகச் செய்யும் வகையில் சுமார் 3 மாதங்களாக காலி முகத்திடலைச் சுற்றியுள்ள பகுதியில் செயற்பாட்டாளர்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

செயற்பாட்டாளர்கள் தங்கியிருந்த காலி முகத்துவாரம் பொதுச் சொத்து எனவும், 1971 ஆம் ஆண்டு 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் 3(1) பிரிவின் பிரகாரம் கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குட்பட்டது எனவும் மேற்படி அதிகார சபை குறிப்பிடுகின்றது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 30/09/1978 ஆம் ஆண்டு இலக்கம் 4/1 ஐக் கொண்ட இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் விசேட வர்த்தமானியில் இப்பகுதி நகர அபிவிருத்திப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1982 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 8(A)1 இன் படி, நகர அபிவிருத்திப் பகுதியில் ஏதேனும் அபிவிருத்தி நடவடிக்கை அல்லது தற்காலிக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டால், அதற்கான அனுமதி பெறப்பட வேண்டும். ஆர்வலர்கள் அனுமதியின்றி அப்பகுதிக்குள் நுழைந்து பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பல கட்டுமானங்களால், பொதுமக்கள் சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கான உரிமையும் தடைப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நகர அபிவிருத்திச் சட்டத்தை மீறுவதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version