அரசியல்

நாடு திரும்ப மறுக்கும் கோட்டா! – சிங்கப்பூர் விசா மேலும் நீடிப்பு

Published

on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேலும் இரண்டு வாரங்கள் சிங்கப்பூரில் தங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூலை மாதம் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவிவிலகக் கோரி நாட்டில் மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்தது.

இந்தநிலையில், ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறி நாட்டில் தலைமறைவாகவிருந்த கோட்டாபய ராஜபக்ச கடந்த 13 ஆம் திகதி மாலைதீவுக்கு தப்பிச் சென்றார்.

மாலைதீவு சென்ற அவருக்கு அங்கும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.

சாதாரண நபருக்கு வழங்கப்பட்டுள்ள 14 நாட்களுக்கான விசாவே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவருக்கு சலுகைகள் எவையும் வழங்கப்படவில்லை எனவும் சிங்கப்பூர் அரசு தெரிவித்தது.

இதன்படி கடந்த 28ஆம் திகதி குறித்த விசா முடிவடையும் நிலையில், அவருக்கு மீண்டும் 14 நாட்கள் தங்கியிருப்பதற்கான விசா சிங்கப்பூர் அரசால் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், எதிர்வரும் 13ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் சிங்கப்பூரில் தங்குவதற்கு மேலும் 14 நாட்கள் விசாவை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கோரிக்கை இலங்கை அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும், இந்த கோரிக்கைக்கு இணங்க அவருக்கு விசா நீடிக்கப்படவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டபாய ராஜபக்ச இலங்கை திரும்புவதற்கு சரியான தருணம் இதுவல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version