அரசியல்

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் மிலேச்சத்தனமானது!

Published

on

ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்று 24 மணி நேரம் நிறைவடைவதற்குள் காலி முகத்திடலில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றமையை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அவர்கள் தாமாகவே வெளியேற ஆயத்தப்படுத்துகையில் இது நடந்தமை தன் வீட்டை எரித்தமைக்கான பதிலடியோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர்,

போராட்டக்காரர்கள் அரச அலுவலகங்களில் இருந்து வெளியேறுவதற்காக மென்வலு முயற்சிகளை பிரயோகிப்பதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டமை ஏமாற்றத்தையும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகின்றது.

முன்னைய ஜனாதிபதி இருந்த போது பிரதமராக பதவி ஏற்ற பின்னர் போராட்டம் காலி முகத்திடலில் நடைபெறுவதை அனுமதிக்கும் வகையிலும் ஊக்குவிக்கும் வகையிலும் காலிமுகத்திடல் போராட்டம் தொடரலாம் என்றும் கௌரவ இரணில் அவர்கள் அறிக்கை விட்டிருந்தார்.

அத்துடன் முன்னைய அரசாங்கம் இருந்த போது, மே 9 ஆம் திகதி காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்திய போது அதனைக் கண்டித்திருந்த கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமரும், ஜனாதிபதியும் பதவி விலக வேணடும் என்று கோரியிருந்தார்.

ஆனால், அதே திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தற்போது ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் பொது மக்களின் போராட்டத்தை நசுக்குவதற்கு மேற்கொண்ட இந்த வன்முறை பிரயோகம் கவலைக்கிடமானது. இன்று (23.07.2022) முன்னர் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட 83 ஜூலை வன் செயல்களின் 39வது நினைவு தினமாகும். குறித்த வன்செயல்களின் தாக்கம் இன்றும் எம் மக்கள் மனதில் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டே தான் உள்ளது.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்தலின் போது கௌரவ ரணில் விக்கிரமசிங்கவுக்கு நான் வாக்களித்ததன் காரணம் அவர் பொது மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்த நாட்டின் பொருளாதார பிரச்சனைகளுக்கு தகுந்த தீர்வொன்றினை கொண்டு வந்து பொதுமக்களைப் பட்டினிச் சாவில் இருந்து காப்பாற்றுவார் என்ற எதிர்பார்ப்பில் தானே அன்றி, அடக்குமுறைகள் ஊடாக பொதுமக்களின் போராட்டங்களை நசுக்க வேண்டும் என்பதற்காக அல்ல.

ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு புதிய ஜனாதிபதியும் அரசாங்கமும் நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில் போராட்டக்காரர்கள் அரச அலுவலகங்களில் இருந்து வெளியேறி அரசாங்கம் சுமூகமாக செயற்படுவதற்கு இடமளிக்கும் வகையில் தம்மைத் தயார் செய்து கொண்டிருந்த போது பொறுமை இழந்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த வன்முறை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். வன்முறைகளைத் தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் அனைவரும் கேட்பது கௌரவ ஜனாதிபதியின் காதில் விழும் என்று எதிர்பார்க்கின்றேன்.- என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version