அரசியல்

தாயின் இறுதிக்கிரியைக்காக 26 வருடங்களின் பின் யாழ் வந்த அரசியல் கைதி

Published

on

26 வருடங்களாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் தனது தாயின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தந்தையின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள அழைத்துவரப்பட்ட இவர் இன்று தாயின் இறுதிக்கிரியைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இச் சம்பவம் அனைவரின் மனதையும் நெருடலுக்குள்ளாக்கியுள்ளது.

யாழ்ப்பாணம் , திருநெல்வேலியில் வசித்து வந்த குறித்த அரசியல் கைதியின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் – வாகீஸ்வரி (கண்ணாடி அம்மா) கடந்த (15) புதன்கிழமை காலமானார்.

மண்ணறைக்குப் போவதற்குள் தன் பிள்ளைக்கு ஒரு பிடி சோறூட்ட வழிகாட்டையா என நல்லூரானிடம் வேண்டிக்கொண்டிருந்த தாய், இதுவரை தன் பிள்ளையின் திருமுகம் காணாமலே விண்ணுலகை ஏகிவிட்டார் என உறவினர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

கடந்த 1996 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தமிழ் அரசியல் கைதியாக கடந்த 26 ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் இலங்கை மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவத்தின் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தந்தையின் இறுதிக்கிரியைக்காக ஒரு மணி நேர இடைவெளியில் வந்த இவர், இன்று தாயின் இறுதிக்கிரியைக்காக 26 வருடங்களின் பின்னர் வந்துள்ளமை அனைவரின் மனதையும் நெகிழவைத்துள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version