இலங்கை

கிராம அலுவலரூடாக எரிவாயு விநியோகம்! – யாழ். அரச அதிபர் தெரிவிப்பு

Published

on

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் மக்களது கேள்விக்கு குறைவான சிலிண்டர்களே எமக்கு கிடைக்கப்பெறுவதனால் கிடைக்கப்பெறும் சிலிண்டர்களை சீரான முறையில் மற்றும் நியாயமான விலையில் மக்கள் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக பின்வரும் பொறிமுறை ஊடாக எரிவாயு சிலிண்டர்களை எதிர்வரும் காலங்களில் பகிர்ந்தளிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தெரிவிக்கையில்,

கிராம அலுவலர் பிரிவுகளுக்கென ஒதுக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடம், உரிய கிராம மக்கள் தமது எரிவாயு சிலிண்டருக்கான பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

விநியோகஸ்தர்களும் மேற்படி விபரங்கள் தொடர்பான பதிவேடு ஒன்றினை பேணுதல் வேண்டும்.

விநியோகஸ்தர்களிடம், ஒரு வீட்டுக்கு ஒரு சிலிண்டர் என்ற முன்னுரிமை அடிப்படையில் பதிவு மேற்கொள்ளப்படுவதனை கிராம அலுவலர்கள் உறுதிப்படுத்தல் வேண்டும்.

விநியோகஸ்தர்களுக்கு சிலிண்டர்கள் கிடைக்கப்பெற்றதும் பதிவு அடிப்படையில் அவர்களுக்கான விநியோகம் நடைபெறும்.

குறித்த நேரத்தில் பதிவு மேற்கொண்டோர் சமூகமளிக்காவிடின் பதிவு அடிப்படையில் அடுத்துள்ள பயனாளிக்கு விநியோகிக்கப்படும்.

விநியோகிக்கப்பட்ட விபரம் பிரதேச செயலக மேற்பார்வையில் குடும்ப பங்கீட்டு அட்டையில் திகதி குறிப்பிடப்பட்டு பதிவு செய்தல் கட்டாயமானது.

சிலிண்டரை பெறவருபவர் உரிய கிராம அலுவலர் பிரிவு பங்கீட்டு அட்டை, தேசிய அடையாள அட்டையுடன் பங்கீட்டு அட்டையில் பெயருடைய அங்கத்தவர் ஒருவராக இருத்தல் கட்டாயமானது.

விநியோகஸ்தர்களுக்கு விநியோகிக்கும் முறை:

தமக்கு கிடைக்கப்பெறும் சிலிண்டர்களது எண்ணிக்கை அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு லிட்ரோ பிராந்திய முகாமையாளரால் வழங்கப்படும்.

கிடைக்கப்பெற்ற எரிவாயு சிலிண்டர்களது எண்ணிக்கைக்கு அமைவாக விநியோகஸ்தர்களுக்கு விநியோகிக்க வேண்டிய சிலிண்டர்களது எண்ணிக்கை பிரதேச செயலாளர்களால் எஸ்விஎம் நிறுவனத்திற்கு அறிவிக்கப்படும்.

அதன் அடிப்படையில் எஸ்விஎம் நிறுவனத்தினர் விநியோகஸ்தர்களுக்கான சிலிண்டர்களை விநியோகிப்பர்.

2. கைத்தொழில் நிலையங்கள், உணவுச்சாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் நலன்புரி சேவை நிறுவனங்கள் (சிறுவர் / முதியோர் இல்லம்) ஆகியவற்றுக்கு வழமைபோல் விநியோகஸ்தர்களால் நேரடியாக விநியோகிக்கப்படும். – என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version