அரசியல்
கோட்டாவுக்குச் சஜித் மீண்டும் கடிதம்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மீண்டும் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
பிரதமர் பதவியைத் தாம் பொறுப்பேற்கத் தயாராகவுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவரால் நேற்றுமுன்தினம் (12) ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.
எனினும், ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிப்பதற்கான தனது தீர்மானத்தை ஒருபோதும் மாற்றப்போவதில்லை என ஜனாதிபதி பதில் கடிதம் மூலம் எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதற்குப் பதில் வழங்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் ஒரு கடிதத்தை ஜனாதிபதிக்கு நேற்று (13) அனுப்பியுள்ளார்.
இதில், பிரதமராகப் பதவியேற்கவுள்ளதாகத் தாம் நேற்றைய நாளில் முதன்முதலாக அறிவித்ததாக ஜனாதிபதியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தமை முற்றிலும் தவறானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோது தாம் அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கவில்லை என்றும், ஜனாதிபதியின் அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னரே இறுதித் தீர்மானத்தை அறிவிப்பதாகத் தான் தெரிவித்திருந்ததாகவும் சஜித் பிரேமதாஸ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏற்கமாட்டார்கள் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login