இலங்கை
குருநகர் இளைஞன் கொலை! – சந்தேக நபர் 8 மாதங்களின் பின் நீதிமன்றில் சரண்
குருநகரில் இளைஞன் கொலையுடன் முதன்மை சந்தேக நபரான ரெமி என அழைக்கப்படுபவர் உள்பட மூவர் சுமார் 8 மாதங்களின் பின்னர் நேற்று தமது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தனர்.
மூவரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்பபாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.
2021ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22ஆம் திகதி பட்டப்பகலில் குருநகரில் வீதியில் வைத்து ஜெரன் (வயது-24) என்பவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
சம்பவ தினத்தன்று நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது , மோட்டார் சைக்கிளில் வந்த மற்ரொரு குழு அவர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தனர். சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர்களான ரெமி மற்றும் அவரது சகோதர்களைத் தேடி தீவகம் உள்பட பல இடங்களில் பொலிஸார் தேடுதல் நடத்தினர். மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.
9 நாள்களின் பின்னர் 6 பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் உள்பட 14 பேர் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் முதன்மை சந்தேக நபர்களான சகோதரர்களில் ஒருவரான ரெமி தலைமறைவாகியிருந்தார்.
சுமார் 8 மாதங்களின் பின் ரெமி உள்ளிட்ட மூவர் தமது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தனர்.
சந்தேக நபர்கள் சார்பில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்டது. அதனை நிராகரித்த நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, சந்தேக நபர்களை மறு தவணை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, கொல்லப்பட்டவர், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையில் 2018ஆம் ஆண்டு மோதல் இடம்பெற்றதாகவும், அதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
You must be logged in to post a comment Login