அரசியல்

நாய்கள் குரைக்கும்போது சிங்கங்கள் அஞ்சுவது கிடையாது! – மே தின உரையில் ஜீவன் தொண்டமான்

Published

on

ஓரணியில் திரள்வோம், ஒற்றுமையாக இருப்போம், உரிமைகளை வெல்வோம். மீண்டெழுவோம் என அறைகூவல் விடுத்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், நாய்கள் குரைக்கும்போது சிங்கங்கள் அஞ்சுவது கிடையாது எனவும் சூளுரைத்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் இன்று (01.05.2022) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், மேலும் கூறியவை வருமாறு,

“ நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் மக்கள் பக்கம் நின்றே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவெடுத்தது. ஆனால் எமது சமூகத்தை காட்டிக்கொடுக்கும் விதத்தில் ஒரு சிலர் செயற்படுவதால் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபா என்பது எமது இலக்கல்ல என்பதை தேர்தல் காலத்திலேயே அறிவித்துவிட்டோம். கல்வியும், காணி உரிமையும்தான் பிரதான இலக்கு. அதனை அடைவதற்கே தீவிர முயற்சியில் இறங்கியுள்ளோம். எண்ணம்போல்தான் செயல் என்பார்கள், மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது கனவும்கூட.

நான் பதவிக்காக அரசியல் செய்பவன் அல்லன். மக்களுக்கானதே எனது அரசியல் பயணம். அதனால்தான் ராஜபக்ச அரசுடனான உறவை முறித்துக்கொண்டு, இன்று மக்கள் பக்கம் நிற்கின்றோம். அப்படி இருந்தும் வரலாறு தெரியாத சிலர், காங்கிரஸை விமர்சித்து வருகின்றனர்.

மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தில் இ.தொ.கா. பட்டி அணிவிக்கப்பட்டிருந்தது குறித்தும் விமர்சிக்கின்றனர். இ.தொ.கா என்பது மக்கள் இயக்கம். மக்களை பாதுகாத்த அரசியல் இயக்கம். மக்களுக்கு உரிமைகளை வென்றுக்கொடுத்த அரசியல் கட்சி. எனவே, அதை அணிவதில் சிக்கல் கிடையாது. இதற்கு ஏன் பதிலளிக்கவில்லை என சிலர் கேட்கின்றனர்.நாய்கள் குரைக்கும்போது, சிங்கங்கள் அஞ்சுவது கிடையாது.

எமது மக்களுக்கு நில உரிமை வேண்டும். 150 வருடங்களாக நிலமற்றவர்களாக வாழ்கின்றோம். இதனை பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியாவின் உதவியும் அவசியம். அதற்கான உறவு பாலமாக அண்ணாமலை இருப்பார் என நம்புகின்றேன்.” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version