அரசியல்

மஹிந்த பதவி விலகக்கூடாது! – மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் ஏகமனதாக தீர்மானம்

Published

on

பிரதமர் மஹிந்த ராஜபக்சவோ அல்லது அரசோ பதவி விலகக்கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினர் இன்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.

பிரதமர், அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினருக்கு இடையில் அலரிமாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்ற சந்திப்பிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைய இந்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவிப்பதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது எனப் பிரதமரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராகக் கடமையாற்றுவது அத்தியாவசியமானது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்க உறுப்பினர்கள் இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டினர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பெயரையும் புகைப்படங்களையும் பயன்படுத்தி மக்கள் மத்திக்கு சென்று நாடாளுமன்றம் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக சுயாதீனமாகச் செயற்படுவது நெறிமுறைக்கு புறம்பானது எனவும் மாகாண சபை உறுப்பினர்கள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

69 இலட்சம் பெரும்பான்மை மக்கள் இன்னமும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இருக்கின்றனர் எனவும், அவர்களது மௌனம் காரணமாக சிறு குழுவின் போராட்டத்துக்கு சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களிலும் விளம்பரம் கிடைத்தமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனவும் மாகாண சபை உறுப்பினர்கள் சங்க உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் போராட்டங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் அரசுக்கு எதிரான பல அரசியல் அமைப்புகளால் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களைத் தூண்டிவிட்டு செயற்படுத்தும் ஒன்று எனச் சுட்டிக்காட்டிய குறித்த பிரதிநிதிகள், இந்தப் போராட்டத்தில் தீவிரவாத சக்திகள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் நாட்டைச் சீர்குலைக்க எதிர்பார்க்கும் வெளிநாட்டு சக்திகள் செயற்படுகின்றனர் எனவும் கூறினர்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான 30 வருடகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நாட்டை வழிநடத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ச இல்லாவிட்டால் இன்று இவ்வாறான போராட்டங்களை நடத்துவதற்கான சூழல் உருவாகியிருக்காது எனவும் அவர்கள் நினைவுகூர்ந்தனர்.

இந்தச் சந்திப்பில் அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் – என்றுள்ளது.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version