அரசியல்

இடைக்கால அரசின் பிரதமராக டலஸ்?

Published

on

பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான அமைச்சரவை உடனடியாக பதவி விலகி, சர்வகட்சி இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு வழிவிட வேண்டும் – என கோரிக்கை விடுத்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, ஆளுங்கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான டலஸ் அழகப்பெரும இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார்.

குறித்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

” தேசிய நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக்கொண்டு, அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி – அவற்றின் ஒத்துழைப்பை பெறக்கூடிய புதிய சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிக்க, நாடாளுமன்றத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

இதற்காக தற்போதைய அமைச்சரவை வழிவிட்டால், அந்த தியாகத்துக்கு இந்நாட்டு வரலாற்றில் உரிய கௌரவம் கிட்டும்.” – எனவும் மேற்படி கடிதத்தில் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் – மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சரவையை, குறைந்தபட்சம் ஒரு வருடகாலத்துக்காவது நியமித்து, சவால்களை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் டலஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியுற்ற பிறகு அவரை விட்டு பலர் சென்றிருந்தாலும், டலஸ் அழகப்பெரும் ராஜபக்சவுக்கு பக்கபலமாக இருந்தார்.

மஹிந்த சூறாவளியை உருவாக்கி, குறுகிய காலப்பகுதியில் மொட்டு கட்சி வெற்றிநடை போடவும் பெரும் பங்களிப்பு செய்தார்.

எனினும், கடந்த பொதுத்தேர்தலின்போது ராஜபக்சக்களின் நகர்வுகள் குறித்து டலஸ் கடும் அதிருப்தி அடைந்தார்.

ராஜபக்சக்களின் உறவினரான நிபுண ரணவக்கவை, மாத்தறை மாவட்டத்தில் வெற்றிபெற வைப்பதற்காக தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அம்மாவட்டத்தில் 131,010 வாக்குகளைப் பெற்று நிபுண ரணவக்க முதலிடம் பிடித்தார். டலஸ் அழகப்பெரும மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். மாத்தறை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவிகூட நிபுண ரணவக்கவுக்கே வழங்கப்பட்டது.

இதனால் அரசுமீது டலஸ் அதிருப்தியிலேயே இருந்தார். அவரை சமாளிக்க அமைச்சு பதவியுடன், அமைச்சரவை பேச்சாளர் பதவியும் கையளிக்கப்பட்டது.

நாட்டில் தற்போது கடும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. அரசு பதவி விலக வேண்டும் என போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையிலேயே மக்கள் கோரிக்கைக்கு மதிப்பளித்து இந்த கடிதத்தை டலஸ் அரச உயர்பீடத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஏற்கனவே மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை அரசு இழந்துள்ளது. சாதாரண பெரும்பான்மையும் ஊசலாடுகின்றது. கட்சி தாவிய உறுப்பினர்களை வைத்துக்கொண்டே, சாதாரண பெரும்பான்மையை அரசு தக்க வைத்துக்கொண்டுள்ளது.

புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு மொட்டு கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதனால் அரசுக்கான ஆதரவு சரிந்து வருகின்றது.

அதேவேளை, சர்வக்கட்சி இடைக்கால அரசின் பிரதமருக்கான பெயர் பட்டியலில், 11 கட்சிகளின் சார்பில் டலஸ் அழகப்பெருமவின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version