அரசியல்

உங்கள் நடத்தையே மரியாதையை தீர்மானிக்கும்! – அரசுக்கு ரணில் அறிவுரை

Published

on

“ காலி முகத்திடலில் போராடும் இளைஞர்கள் ஆயுதத்தை கையில் எடுக்கவில்லை. கிளர்ச்சி செய்யவும் இல்லை. மாறாக அரசமைப்புக்குள் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளவே முற்படுகின்றனர். எனவே, இளைஞர்களின் கோரிக்கைகளையும் உள்வாங்கியே தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.”- இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“ நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் ஒழுக்கமாக – பொறுப்புடன் செயற்பட வேண்டும். எமது நடத்தைமூலமே மக்கள் மத்தியில் மரியாதையை பெறக்கூடியதாக இருக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தையும் சுற்றிவளைத்து போராடவேண்டிய நிலை உருவாகும்.

எதிரணிக்குரிய பொறுப்பை நாம் சரிவர நிறைவேற்றுவோம். ஆளுங்கட்சி தமக்கான பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். புதிய அமைச்சர்கள் நால்வர்தான் சபைக்கு வந்துள்ளனர். இந்நிலைமை தொடரக்கூடாது. அமைச்சர்கள் பங்கேற்று, நிலைமையை தெளிவுபடுத்த வேண்டும்.

நாடு நெருக்கடியான கால கட்டத்திலேயே உள்ளது. தற்போதைய நெருக்கடி நிலைமை மேலும் உக்கிரமடையலாம். வரிசைகள் முடியபோவதில்லை. எனவே, மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வழிமுறைகள் பற்றி ஆராய வேண்டும். பாதீட்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரமே ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை கிடைத்தது. அதன்பின்னரே 20 கொண்டுவரப்பட்டது. எனவே ,19 மீள அமுல்படுத்தப்பட வேண்டும். குழுக்கள் முறைமை உருவாக்கப்பட வேண்டும். அதில் இளைஞர்களின் பிரதிநிதிகளையும் உள்வாங்க வேண்டும்.

தமது எதிர்காலத்துக்காகவே இளைஞர்கள் போராடுகின்றனர். அவர்கள் கடந்த காலங்களில்போன்று ஆயுதம் ஏந்தவில்லை. கிளர்ச்சி செய்யவும் இல்லை. எனவே, இளைஞர்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து – அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version