அரசியல்

ரம்புக்கனையில் பொலிஸார் வெறியாட்டம்! – ஒருவர் சாவு- 24 பேர் காயம் – நால்வர் கவலைக்கிடம்

Published

on

கேகாலை மாவட்டம், ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், பொலிஸார் உட்பட காயமடைந்த மேலும் 24 பேர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மக்களின் கல்வீச்சுத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் 8 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த 24 பேரில் நால்வர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் இன்று காலை முதல் மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மார்க்கத்துக்கும் தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் முற்றாக ஸ்தம்பித்தன. எரிபொருள் பவுசர் ஒன்றையும் மக்கள் தடுத்து நிறுத்தினர்.

போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர். எனினும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. பதிலுக்குப் போராட்டக்காரர்களும் கல்வீச்சுத் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ரம்புக்கனைப் பகுதி போர்க்களமாக மாறியது.

இதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டனர். இதில் ஒருவர் பலியாகினார். காயமடைந்த 16 பேர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். உயிரிழந்தவர் துப்பாக்கிச்சூட்டால் ஏற்பட்ட காயத்தால்தான் பலியாகினார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

“போராட்டக்காரர்களால் ஓட்டோவொன்று கொளுத்தப்பட்டது. சொத்துகளுக்கும் தேசம் விளைவிக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் பொலிஸார் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். இதனால் 8 பொலிஸாரும் காயமடைந்தனர்” – என்றார்.

இந்நிலையில், ரம்புக்கனைப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version