அரசியல்
21ஆவது திருத்தச் சட்டம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் யோசனை!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தைப் பலப்படுத்துவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 19ஆவது திருத்தச் சட்டத்தை மீள ஸ்தாபிக்கும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் நேற்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டது என நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலைக்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று மாலை நாடாளுமன்றில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றிருந்தது.
அத்துடன் இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒருவர் நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடுவதற்குத் தடை விதிப்பது தொடர்பிலும் நேற்றைய கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தங்களுக்கு எதிர்கட்சியின் பக்கத்தில் ஆசனங்களை ஒதுக்குமாறு சுயாதீனமாகச் செயற்படவுள்ளது என அறிவித்துள்ள 41 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரிடம் கோரியுள்ளனர்.
குறித்த 41 பேருக்கும் இன்று நாடாளுமன்றில் எதிர்க்கட்சியின் பக்கத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்படவுள்ளன.
இதேவேளை, தற்போதைய அரசியல் நிலை மற்றும் நாடாளுமன்றின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் சந்தர்ப்பத்தில் சபாநாயகரினால் விசேட அறிவிப்பு ஒன்று விடுக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
You must be logged in to post a comment Login