இலங்கை

24 மணிநேரத்தில் சிறுவன் உட்பட 7 பேர் பரிதாபச் சாவு!

Published

on

நாட்டில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்கள் காரணமாக 13 வயது சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரத்தினபுரி – எல்பிட்டிய வீதியில் நேற்று பிற்பகல் மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் எல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நபர் கொடகவெல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். லொறியின் சாரதி கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்திய குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை ஹொரணை – தல்கஹவில வீதியில் மோட்டார் சைக்கிளைக் கட்டுப்படுத்த முடியாமல் பத்தரமுல்லைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவர் சறுக்கி கீழே விழுந்து விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் பலத்த காயங்களுடன் ஹொரண வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – கண்டி வீதியில் பங்களாவத்தை பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதி விளக்கின் மீது மோதி கடவத்தையில் வசிக்கும் 40 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளார். ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லவ பொலிஸ் பிரிவில் லொறியும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 24 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். விபத்தின்போது பெண் ஒருவரும் குழந்தையும் பயணித்த ஓட்டோ மீது லொறி மோதியுள்ளது. ஓட்டோவின் சாரதியான 24 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் பெண் மற்றும் குழந்தை படுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்தனகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 34 வயதுடைய நபர் ஒருவர் தனது கட்டுப்பாட்டை இழந்து வீதி விளக்கின் மீது மோதியதில் உயிரிழந்துள்ளார். விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நபர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தம்புத்தேகம பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இரண்டு குழந்தைகளுடன் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் பாதசாரி கடவைக்கு அருகில் கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த நபரும் இரண்டு குழந்தைகளும் தம்புத்தேகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். சைக்கிளில் பயணித்தவரும் அவரது மற்றைய 14 வயது குழந்தையும் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மெல்சிறிபுர பகுதியில் டிப்பர் ரக வாகனமும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தின்போது லொறியின் சாரதி இரண்டு குழந்தைகளுடன் பயணித்துள்ளார். காயமடைந்த மூவரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், லொறியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version