இலங்கை
மட்டக்களப்பில் யானை தாக்கி விவசாயி பலி!
மட்டக்களப்பு, கரடியனாறு – ஈரக்குளத்தில் யானை தாக்கி விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது எனக் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
ஐந்து பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் தங்கராசா (வயது 55) என்பவரே பலியாகியுள்ளார்.
இந்த நபர் பயிர்ச்செய்கை நடவடிக்கையிலும், மாடு வளர்ப்பிலும் ஈடுபட்டு வருபவர். நேற்றுப் பால் கறப்பதற்காகத் தனது மாடுகளைத் தேடிச் சென்றபோது, மறைந்திருந்த யானையொன்று அவரைத் தாக்கியுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.
கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைய சம்பவ இடத்துக்குச் சென்ற பிரதேசத்துக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் சடலத்தைப் பார்வையிட்டார்.
சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் பொருட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பொலிஸாருக்கு அவர் உத்தரவிட்டார்.
You must be logged in to post a comment Login