அரசியல்

கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் நாமே! – சுமந்திரனின் கருத்துக்கு ரெலோ பதில்

Published

on

“விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் நாமே. விடுதலைப்புலிகளை வன்முறையாளர்கள் போல் காட்டிக் கொள்ளும் சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கத் தகுதியுள்ளதா?”- இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி..

வவுனியாவில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்வொன்றின் பின்னர் கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறினால் சந்தோசமடைவோம்” என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், சுமந்திரன் எம்.பியின் கருத்துக்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழீழ விடுதலை இயக்கம் விலகிச் சென்றால் தமிழரசுக் கட்சி சந்தோசப்படும் என்று சுமந்திரன் எம்.பி. தெரிவித்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகி 10 வருடங்களின் பின்னரே சுமந்திரன் கட்சிக்குள் வந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் ரெலோ முக்கிய பங்காற்றியிருந்தது. கிழக்கில் உள்ள தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் பலருக்கும் அது தெரியும்.

ஆயுதப் போராட்டத்தை வன்முறையென சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வன்முறையை ஏற்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

சுமந்திரன் வன்முறை எனக் குறிப்பிடும் வே.பிரபாகரனின் ஆசீர்வாதத்துடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அந்தக் கூட்டமைப்பில் சுமந்திரன் எப்படி அங்கம் வகிக்க முடியும்?

இதேவேளை, சுமந்திரனின் கருத்து தமிழரசுக் கட்சியின் கருத்தா என்பதை அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும், சுமந்திரனின் கருத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தா என்பதை இரா.சம்பந்தனும் தெளிவுபடுத்த வேண்டும்.

போராட்டத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் ஒரு துளியளவு பங்களிப்பையும் செலுத்தாதவர் சுமந்திரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அனைவருக்கும் முன்பாகவே எமது முடிவை அறிவித்தோம். எமது முடிவு ஜனநாயக ரீதியிலானது என இரா.சம்பந்தனும் தெரிவித்திருந்தார்.

சுமந்திரன் பல தடவைகள் சீண்டியபோதும், நாம் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மௌனம் சாதித்தோம். இப்போது சுமந்திரன் சொன்ன கருத்து பாரதூரமானது. அதற்குப் பதிலடி கொடுப்போம்.

எம்மைத் துரோகிகள் போல் சுமந்திரன் பொய்யான கருத்தைத் தெரிவித்திருந்தார். நாம் துரோகிகளாக புலிகளால் பார்க்கப்பட்டிருந்தால், கூட்டமைப்பை உருவாக்கும் பணியை புலிகள் எம்மிடம் தந்திருக்க மாட்டார்கள்.

விடுதலைப்புலிகளும், ரெலோவும் எப்படி அன்னியோன்யமாக செயற்பட்டார்கள் என்பது வரலாறு தெரிந்தவர்களுக்கும், விடுதலைப்புலிகளின் மூத்த போராளிகளுக்கும் நன்கு தெரியும். வவுனியாவில் விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து செயற்படுவதாகக் கூறி, எமது உறுப்பினர்களும், அலுவலகங்களும் தாக்கப்பட்டிருந்தன.

எம்மையும் விடுதலைப்புலிகளையும் பற்றிப் பேசும் தகுதி சுமந்திரனுக்குக் கிடையாது” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version