அரசியல்

சத்தம் சந்தடியின்றி வடக்கு மாகாண மருத்துவமனைகள் மத்தி வசமாகினவா?

Published

on

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட 4 மருத்துவமனைகளை மத்திய அரசின் கீழ் உள்வாங்குவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கிடப்பில்போடப்பட்டிருந்த நிலையில், திடீரென வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு மத்திய அரசின் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைக்கு நேற்றுமுன்தினம் அனுப்பி வைக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மாகாண அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்ட 9 மருத்துவமனைகளை மத்திய அரசின் கீழ் உள்வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. அதற்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் 4 மருத்துவமனைகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. கிளிநொச்சி. மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மருத்துவமனைகளே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. மாகாண அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. கடந்த 25ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடனான சந்திப்பின்போதும் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை, நாடு முழுவதும் அடையாளப்படுத்தப்பட்டிருந்த 9 மருத்துவமனைகளில் வடக்கு மாகாணத்தின் 4 மருத்துவமனைகள் தவிர்ந்து தென்பகுதியிலுள்ள 5 மருத்துவமனைகளில் 4 மருத்துவமனைகள் மத்திய அரசின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு, மத்திய அரசால் கேள்வி கோரலில் தெரிவு செய்யப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் கடமைக்கு சமூகமளித்தனர். இதேவேளை அங்கு மாகாண நிர்வாகத்தால் கேள்வி கோரலில் தெரிவு செய்யப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்களும் கடமையிலிருந்தனர்.

மாகாண நிர்வாகத்துக்கு எந்தவொரு முன்னறிவித்தலும் வழங்கப்படாமல் மத்திய அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

மாகாண மருத்துவமனைகளை சத்தம் சந்தடியில்லாமல், மாகாண நிர்வாகத்துக்கு அறிவிக்காமல் மத்திய அரசின் கீழ் உள்வாங்கியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version