அரசியல்

கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும்! – கஜேந்திரகுமார் வலியுறுத்து

Published

on

“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே! அவ்வாறெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதியுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்பு நடைபெற்றபோதும் கூட இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு தொடர்பில் எந்தவிதமான பேச்சுகளும் நடக்கவில்லை என்பது ஊடகங்கள் மூலம் உறுதியாகின்றது.

அதேசமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கத்திலிருந்து 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான அழுத்தங்கள் அரசுக்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிப்படுத்துகின்றன. இது சம்பந்தமாக நாம் தெரிவித்து வந்த கருத்துக்களானது மீண்டும் மீண்டும் உறுதியாவதாகவே கருதுகின்றோம்.

கடந்த காலங்களில் புலம்பெயர் தமிழர்களைத் தடை செய்த அரசு தற்போது பொருளாதார நெருக்கடி எழுந்துள்ளபோது அந்தப் புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கின்றது.

புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையை நீக்குவதற்குக்கூட அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசியுள்ளது. இது எதைக் காட்டுகின்றது என்றால் தடை என்பது இலங்கை அரசினுடைய தேசிய பாதுகாப்பு சம்பந்தமான விடயம் அல்ல என்பதே ஆகும்.

13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே! அவ்வாறெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version