அரசியல்

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியீடு!

Published

on

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான ‘உறுப்புரை 4’ ஆலோசனை மற்றும் பணிக்குழாம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன் நிறைவேற்று அதிகாரியின் இலங்கை தொடர்பான அறிவித்தலும் இந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில், நம்பகமான, தெளிவான மூலோபாயங்களை இலங்கை அரசு அமுலாக்குவது உடனடி அவசியப்படாகும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

பாதிப்புமிக்க குழுக்களைப் பாதுகாத்து, வறுமையைக் குறைப்பதற்கு சமூக பாதுகாப்பு முறைமைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கையின் பொருளாதாரத்துக்குத் தாக்கம் செலுத்தியுள்ள பிரதான விடயம் குறித்து இந்த அறிக்கையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த அறிக்கை கவனம் செலுத்துகின்றது.

கொரோனா பரவல் இலங்கையின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளதுடன், சுற்றுலாத்துறையின் வருமான இழப்பு அதில் பிரதானமாக உள்ளது.

தொற்றுநோய்க்கு முந்தைய வரி குறைப்புகள் மற்றும் கொரோனா தாக்கம் காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் நிதிப் பற்றாக்குறையானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தைக் கடந்தது.

கடந்த ஆண்டு, அரச கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில நூற்றுக்கு 119 சதவீதமாக உயர்ந்ததுடன், சர்வதேச மூலதனச் சந்தைகளுக்கான அணுகல் இல்லாமல்போனது.

வெளிநாட்டு கடன் தீர்ப்பனவுகள் மற்றும் நடைமுறைக் கணக்கு நிலுவை விரிவாக்கம் காரணமாக அந்நிய செலாவணி பற்றாக்குறை உருவாகியுள்ளது.

இலங்கையானது, கொடுப்பனவு சமநிலை மற்றும் இறையாண்மைக் கடன் நெருக்கடியை அனுபவிக்கத் தொடங்கியதுடன், வெளிநாட்டு இருப்புக்கள், கடனைச் செலுத்துவதற்குப் போதுமானதாக இன்மையால், அரச கடன் சுமை அதிகரித்தது.

பரிமாற்ற கையிருப்பைக் கட்டியெழுப்புவதற்கு அதிகாரிகள் குறுகிய கால நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இந்த வருடத்திற்கு அப்பால் இலங்கையால் எவ்வாறு பாரிய கடன் சேவையை பேண முடியும் என்பது தெளிவற்றதாகும்.

இந்தச் சூழலில் நிதி ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவது, வருமான வளர்ச்சியின் அடிப்படையில் அமைய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

வட் எனப்படும் பெறுமதி சேர் வரி மற்றும் வருமான வரி விகிதங்களை அதிகரித்தல் மற்றும் விரிவாக்கல் நடவடிக்கைகள் மூலம் சீர்திருத்தங்கள் செயற்படுத்தப்பட வேண்டும்.

நிதி அபாயத்தைக் குறைக்கும் வகையில், வலுசக்தி விலை நிர்ணயம் சீராக்கப்பட வேண்டும் என்பதுடன், நட்டத்தில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மீள்கட்டமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version