இலங்கை

பிக்பாஸ் வீட்டுக்குள்ளிலிருந்து வெளியேற்றப்பட்டார் சுசில்!

Published

on

இரண்டு ஜனாதிபதித் தேர்தல்கள் உட்பட பல தேர்தல்களில் வேட்புமனு கையொப்பமிட்ட பலம்பொருந்திய செயலாளர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசும், ‘பிக்பாஸ்’ வீடும் ஏவோவொருவகையில் ஒன்றுதான். ஆயிரம் பிரச்சினைகள், சர்ச்சைகள் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியிலேயே நாட்கள் நகர்கின்றன.

பிக்பாஸ்’ வீட்டுக்குள் நடிகர்கள், வில்லன்கள், காமெடியன்கள், சுயநலவாதிகள், பொதுநலவாதிகள் என பல்வேறு குண அம்வங்களைக்கொண்ட போட்டியாளர்கள் இருக்கின்றனர். அதுபோலவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திலும் வலதுசாரிகள், இடதுசாரிகள், இனவாதிகள், மதவாதிகள், முற்போக்கு சிந்தனை வாதிகள், தேசப்பற்றாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அங்கம் வகிக்கின்றனர்.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ‘பிக்பாஸ்’ யார் என்பது இன்னும் எவருக்கும் தெரியாது. அது சிதம்பர ரகசியமாக பேணி பாதுகாக்கப்பட்டுவருகின்றது. ஆனால் இலங்கை அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சதான் ‘பிக்பாஸ்’. 20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேறிய பின்பு சர்வபலமும் அவருக்கு வந்துவிட்டது. இதனால் எவரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற நிலையும் காணப்படுகின்றது.

நிகழ்ச்சி விதிமுறைகளை மீறுபவர்களை வெளியேற்றும் அதிகாரம் பிக்பாசுக்கு இருக்கின்றது. அதேபோல வாராந்தம் மக்கள் வாக்கெடுப்புமூலமும் வெளியேற்றம் இடம்பெறும்.

அந்தவகையில் தமது அரசில் இராஜாங்க அமைச்சு கட்டமைப்பில் இருந்து சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நீக்கியுள்ளார்.

அரசமைப்பின் பிரகாரம் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதற்கும், நீக்குவதற்கும், விடயதானங்களை கைமாற்றுவதற்குமான முழு அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தியே, இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தற்போதைய அரசின் செயற்பாடுகளை, அரசுக்குள் இருந்துகொண்டே கடுமையாக விமர்சிக்கின்றார். 2022 முதலாம் திகதிகூட விவசாயத்துறை அமைச்சர் பெயில், தகுதியானவர்கள் உரிய இடத்தில் இல்லை என்ற அறிவிப்பை விடுத்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது .

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சுசில் பிரேமஜயந்த, சாதாரண அரசியல்வாதி கிடையாது. அவர் சட்டம்படித்த அதேபோல உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பணியாற்றி தேர்ச்சிப்பெற்றனர். மேல்மாகாண முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக இவரே பதவி வகித்தார். 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களில் செயலாளர் என்ற அடிப்படையில் இவரே கையொப்பமிட்டார்.

கூட்டணியின் செயலாளராக இருந்தாலும், அவர் ஒருபோதும் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்ததில்லை. கடந்த பொதுத்தேர்தலில்கூட போட்டியிட்டு வெற்றிபெற்றே சபைக்கு வந்தார். மஹிந்த அணி வெற்றிபெறுவதற்கு கட்சி நிர்வாக மட்டத்தில் பெரும் பங்காற்றியவர்.

எனினும், அண்மைக்காலமாக அவர் புறக்கணிக்கப்பட்டார். அவருக்கு அமைச்சுப் பதவிகூட வழங்கப்படவில்லை. விஜயதாச ராஜபக்ச மறுத்த, இராஜாங்க அமைச்சு பதவியே அவரிடம் கையளிக்கப்பட்டது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version