இலங்கை

பிரபாகரன் படிப்பறிவில்லாதவர்: பொன்சேகாவின் கருத்துக்கு சிவாஜிலிங்கம் நெத்தியடி!

Published

on

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் சரத் பொன்சேகாவிற்கு தனது கட்சி தலைவர் சஜித் பிறேமதாசவின் கல்வி அறிவு தொடர்பில் தெரியுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

குறித்த கருத்துக்கு இன்று (24) யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது எம்.கே.சிவாஜிலிங்கம் பதில் வழங்கும் போதே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சரத் பொன்சேகா என்பவர் இரட்டை வேடமாக செயற்படுகின்ற ஒருவர். மக்கள் பிரதிநிதியாக செயற்படுவதோடு பொது நிகழ்வுகளில் இராணுவ உடையுடன் செல்லக் கூடிய இரட்டை வேடம் போடும் ஒரு நடிகராவார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளுடைய தலைவர் மேதகு பிரபாகரன், விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்தோர் ஏனைய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இருந்தவர்கள் படிப்பறிவு அற்றவர்கள் என்ற ஒரு கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.

நான் அவருக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், இலங்கையினுடைய தலைவர்களாக, பிரதமராக இருந்தோர் மற்றும் ஏனையோர் எட்டாம் ஆண்டு பத்தாம் ஆண்டு படித்தவர்கள் பல்கலைக்கழகப் படிப்பு அல்லது பட்டப் படிப்பினை முடித்தவர்கள் அல்லர்.

ஆனால் அனைவருமே சாதாரண மட்டத்திலிருந்து தலைவர்களாக வந்தவர்கள். எனவே இவ்வாறு பல உதாரணங்களைக் கூற முடியும்

ஆனால் தலைவர் பிரபாகரன் தன்னுடைய 15வது வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்துவிட்டார். அவர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்துவிட்டு பரீட்சைக்குத் தோற்றவில்லை.

அதேபோல ஏனைய இயக்கங்களினுடைய தலைவர்களையும் எடுத்துப்பார்த்தால் அவர்களும் உயர் படிப்புகளைப் படித்திருக்கவில்லை. ஆனால் அனுபவங்களின் மூலம் செயற்பட்டவர்கள்.

உலகத்திலே இராணுவத்தின் உயர் பதவியான மார்சல் பட்டத்தினை பெற்றவராகவே உலகத்திலுள்ள அனைவரும் பிரபாகரனைப் பார்க்கின்றார்கள்.

ஒரு நடைமுறை அரசை ஒரு முப்படையினை வழிநடத்தியவர். குறிப்பாக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஓயாத அலை என்னும் முறியடிப்பு சமர் மூலம் முறியடித்த பெருமை பிரபாகரனேயே சேரும்.

எனவே அவ்வாறான திறமைகளைப் புரிந்தவரை இரட்டைவேடம் போடும் பொன்சேகா போன்ற நடிகர்கள் படிக்காதவர் என்று கூறும் அளவுக்கு அவர் எளிதானவர் அல்ல.

இவருடைய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கல்வி நிலை என்ன என்று தெரியுமா? அவருடைய கல்வி நிலை பற்றி பொன்சேகா அறிய வேண்டும் அது தொடர்பிலும் பொன்சேகா தனது கருத்தினைக் கூற வேண்டும்.

இதேபோல் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது இவ்வாறான கருத்துக்களை கூறி இருக்கலாமே? ஏன் அவ்வாறு கூறவில்லை அவர் ஒரு நடிகர் இரட்டை வேடம் போடும் நபர் எனவேதான்.

அவர் தற்போது பூரண கருத்துக்களை தென்பகுதி மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்காக கூறி வருகின்றார். நாங்கள் இன்று மகிழ்கின்றோம் ஏனென்றால் இவ்வாறான ஒருவரை ஜனாதிபதியாக நியமித்திருந்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்போம் என்று என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version