செய்திகள்

யாழ். செயலகத்தை முற்றுகையிட்டு ஈ.பி.டிபியினர் போராட்டம்!

Published

on

பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளின் போது யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்து மாவட்ட செயலகம் முன்பாக கண்டன போராட்டமொன்று இன்றையதினம் இடம்பெற்றது.

ஈழமக்கள் ஐனநாயக கட்சியினுடைய ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுகூடிய அக்கட்சியினுடைய உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் வாயில் கதவை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு வந்த மாவட்ட செயலாளரிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மகஜரொன்றை கையளித்ததுடன், 10 நாட்களுக்குள் பிரச்சனைக்குரிய தீர்வு காணப்பட வேண்டுமெனவும் இல்லை எனில் முழுமையாக மாவட்ட செயலகத்தை முடக்குவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்ட அபிவிருத்திகளை பிரதேச ரீதியாக முன்னெடுக்கும்போது ஏற்கனவே அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்களை கணக்கில்கொள்ளாது தன்னிச்சையான செயற்பாடுகளில் மாவட்ட செயலகம் ஈடுபட்டுவருதால் மக்களின் அவசிய தேவைகள் புறக்கணிக்கப்படுவதை மக்கள் பிரதிநிதிகளான எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

குறிப்பாக, பிரதேச சபையை மையப்படுத்திய அபிவிருத்தி திட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் முழுமையாக புறக்கணிக்கப்படும் நிலை யாழ். மாவட்டத்தில் மட்டும் காணப்படுகின்றது. அத்துடன் மக்களின் நலன்கள் அனைத்தும் மக்களின் விருப்புக்கமைவான தெரிவுகளாகவே இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச கூறியுள்ளார். ஆனால் யாழ் மாவட்டத்தில் மாவட்ட செயலகம் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக காணப்படுகின்றது.

மாவட்ட செயலகத்தின் இவ்வாறான நிலைமை மக்களின் தேவைகருதிய செயற்பாடுகளுக்கு இடையூறாக இருப்பதை பிரதேச மக்கள், மக்கள் பிரதிநிதிகளாகிய எம்மிடம் நாளாந்தம் முறையிட்டநிலையில் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் – என்றனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version